நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ என்பவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர். எனவே சிறைச்சாலைகளைக் காண்பித்து அவரது அரசியல் பயணத்தை ஒருபோதும் ஒடுக்கிவிட முடியாது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சூளுரைத்துள்ளது.
அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி. சானக சமகால அரசியல் நிலவரம் தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசுக்கு எதிரான அரசியல் அடக்குமுறைகளை முன்னெடுப்பதற்காகவே, தமக்கு விசுவாசமான அதிகாரிகள் இருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மற்றும் பொலிஸ் உயர் பதவிகளுக்கு ஜனாதிபதி நியமித்துள்ளார். ஏனெனில், தற்போதைய ஆட்சியாளர்களுக்கு நாமல் ராஜபக்ஷதான் தங்களுக்குரிய பிரதான அரசியல் சவால் என்பது மிக நன்றாகவே தெரியும்.
இதன் காரணமாகவே, நாமல் ராஜபக்ஷவுக்கு மக்கள் மத்தியில் அதிகரித்து வரும் ஆதரவைத் தடுப்பதற்கு அரசு முற்படுவதுடன், திட்டமிட்ட வகையில் அரசியல் அடக்குமுறைகளையும் கட்டவிழ்த்து விடுகின்றது.
நாமல் ராஜபக்ஷ என்பவர், இந்நாட்டின் மூத்த அரசியல் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் என்பதை அரசு மறந்துவிடக் கூடாது. எனவே, சிறைச்சாலைகளைக் காண்பித்து அல்லது சிறையில் அடைப்போம் என அச்சுறுத்தி அவரை ஒருபோதும் அடிபணிய வைக்க முடியாது.
நாங்கள் நாட்டின் சுயாதீன நீதிமன்றக் கட்டமைப்பை முழுமையாக நம்புகின்றோம். ஆனால், நீதிமன்றத்துக்குத் தங்களுக்குச் சாதகமான போலித் தகவல்களை அறிக்கையிடும் தேசிய மக்கள் சக்தியின் அரசியல் மயப்படுத்தப்பட்ட பொலிஸார் மீது எங்களுக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை.” – என்றார்.









