மன்னார் மடு திருத்தலத்தின் ஆடி மாத திருவிழா இன்று (2) வியாழக்கிழமை காலை 6:15 மணிக்கு சிறப்பாக இடம்பெற்றது.
மன்னார் மறைமாவட்ட ஆயர் அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகை தலைமையில் அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நிஷாந்த சாகர ஜெய மான்ன ஆண்டகை, மன்னார் மறைமாவட்ட ஓய்வு நிலை ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, மடு பரிபாலகர் அருட்தந்தை பெப்பி சோசை அடிகளார், மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை கிறிஸ்து நேசன் அடிகளார் ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.
குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், திணைக்கள தலைவர்கள், அரசியல் பிரதிநிதிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
திருவிழா திருப்பலியை தொடர்ந்து திருச்சொரூப பவனியும் அதனை தொடர்ந்து திருச்சொரூப ஆசியும் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
திருவிழா திருப்பலியின் போது நாட்டின் பல பாகங்களில் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
மன்னார் மருதமடு அன்னையின் ஆடி மாத திருவிழாவிற்கான கொடியேற்றம் கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியவில் மருதமடு திருத்தல பரிபாலகர் அருட்பணி பெப்பி.சோசை அடிகளார் தலைமையில் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து நவநாள் வழிபாடுகள், திருச்செபமாலைகள் தமிழ், சிங்களம் ஆகிய மொழிகளில் இடம்பெற்றது. மன்னார் மடு மாதா திருத்தலத்தின் ஆடி மாத திருவிழாவுக்கான வேஸ்பர் ஆராதனை நேற்று (1) புதன்கிழமை மாலை இடம்பெற்றது.
தொடர்ந்து இன்று வியாழக்கிழமை (2) காலை 6:15 மணிக்கு திருவிழா திருப்பலி ஆயர் தலைமையில் கூட்டு திருப்பலியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

















