மட்டக்களப்பு, வந்தாறுமூலையில் தமது கிராமத்திற்குச் செல்லும் வீதியை கிழக்குப் பல்கலைக்கழகம் விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தி, அப்பகுதி மக்களும் பொது அமைப்புகளும் இணைந்து கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு முன்னால் இன்று காலை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கடந்த 1990ஆம் ஆண்டு யுத்த காலப்பகுதியில், தமது கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதி மூடப்பட்டதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
யுத்தம் முடிவடைந்ததன் பின்னர், கிழக்குப் பல்கலைக்கழகம் சுற்றுமதில் அமைத்ததால் தங்களது கிராமத்திற்கான வீதி முற்றிலும் தடைப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட மக்கள், தமக்கான வீதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனக் கோரி இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்ற இடத்திற்குத் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளரும், விவசாய மற்றும் காணி அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ந. திலகநாதன் மற்றும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செங்கலடி பிரதேச சபை உறுப்பினர் என். நாகேந்திரன் ஆகியோர் வருகை தந்து, மக்களின் பிரச்சினை தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இதன்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தங்களது நியாயமான கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றையும் அவர்களிடம் கையளித்தனர்.










