உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
29 சனி

ஐ.நா. விதியின் கீழ் இலங்கை மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்! – 9 சர்வதேச அமைப்புகள் வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 2 மாதங்கள் முன்
32 பார்வைகள்


சித்திரவதைகள் மற்றும் மனிதத்தன்மையற்ற கொடூரத் தண்டனைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை ஏற்றுக்கொண்டு, பின்னர் அதன் வரைமுறைகளை மீறிச் செயற்பட்ட இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையின் பிரகடன விதிகளின் கீழ் உரிய சட்ட நடவடிக்கை எடுக்க முன்வருமாறு 9 சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகள் உலக நாடுகளுக்குக் கூட்டாக அவசர வேண்டுகோள் விடுத்துள்ளன.

சர்வதேச மன்னிப்புச் சபை, மனித உரிமைகள் கண்காணிப்பகம், மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்திக்கான ஆசியப் பேரவை, சர்வதேச நீதிக்கான ஆஸ்திரேலிய நிலையம், பாதுகாப்பு பொறுப்புக்கான உலகளாவிய நிலையம், நியூ லைன்ஸ் கற்கைகள் நிலையம், இலங்கையில் சமத்துவம் மற்றும் விடுதலைக்கான மக்கள் அமைப்பு, சமாதானம் மற்றும் நீதிக்கான இலங்கை பிரசாரம் மற்றும் மூலோபாய தர்க்கித்தல் செயற்திட்டம் ஆகிய 9 சர்வதேச அமைப்புகளே இணைந்து இந்தக் கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளன.

அந்தக் கூட்டறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விவரங்கள் வருமாறு:-

“இலங்கை அரசானது சித்திரவதைகளுக்கு எதிரான சர்வதேச பிரகடனத்தை கடந்த 1994ஆம் ஆண்டு ஏற்றுக்கொண்ட போதிலும், அதற்கு முன்னரிருந்தே, அதாவது 1979ஆம் ஆண்டிலிருந்து தனிநபர்களைப் பலவந்தமாகக் கைது செய்வதற்கும், தடுத்து வைப்பதற்கும், வலிந்து காணாமலாக்குவதற்கும் பயங்கரவாதத் தடைச் சட்டத்தை மிக மோசமாகப் பயன்படுத்தி வருகின்றது. இச்சட்டத்தின் ஊடாகத் தமிழ் மக்கள் பெருமளவுக்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டுப் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட தமிழ் மக்கள் மிக கொடூரமான சித்திரவதைகளுக்கும், பாலியல் வன்முறைகளுக்கும், வலிந்து காணாமலாக்கப்படல்களுக்கும் உள்ளாக்கப்பட்டனர். வலிந்து காணாமலாக்கப்பட்டோருக்கு உண்மையில் என்ன நேர்ந்தது என்பதை இலங்கையில் தொடர்ந்து ஆட்சிப்பீடமேறிய அரசுகள் திட்டமிட்ட மறைத்து வருவதன் காரணமாக, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தமது அன்புக்குரியவர்கள் பற்றிய உண்மைகளை இன்னமும் அறியாமல் தவிக்கின்றனர்.

ஐக்கிய நாடுகள் சபையின் விசாரணைகளின் பிரகாரம், இறுதிக்கட்ட யுத்தத்தின் போது தமிழ் மக்களுக்கு அவசியமான உணவு, மருத்துவப் பொருட்கள் மற்றும் ஏனைய மனிதாபிமான உதவிகள் கிடைக்கப் பெறுவதை இலங்கை அரசு வேண்டுமென்றே தடுத்தது என நம்பகரமான ஆதாரங்களின் அடிப்படையில் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன. இவையனைத்தும் சித்திரவதைகள் அல்லது ஏனைய மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்குச் சமனானவையாகும்.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவே கடந்த 2016ஆம் ஆண்டு ஐநா உப குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையில், நாட்டின் சகல பாகங்களிலும் சித்திரவதைகள் தடையின்றி இடம்பெறுவதை உறுதிப்படுத்தியிருந்தது. அதேபோன்று, ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகமானது கடந்த 2024ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், குறிப்பாக வடக்கில் தமிழர்களுக்கு எதிராகப் பாதுகாப்புத் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் என்பவற்றை அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்துள்ளதுடன், இவை பொலிஸ் காவலில் நிகழும் உயிரிழப்புகளுக்கும் காரணமாக அமைந்திருக்கக்கூடும் எனச் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கையில் ஆட்சிப் பீடமேறிய ஒவ்வொரு அரசி ன் கீழும் குற்றவாளிகள் தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு ஆழமாக வேரூன்றியுள்ளது. கடந்த ஆண்டு மே மாதத்தில் கூட, இறுதிக்கட்டப் போரின் போது பொதுமக்கள் இராணுவத்தினரால் பாதுகாக்கப்பட்டதாகத் தற்போதைய அரசு பொய்யான கருத்தொன்றை வெளிப்படுத்தியிருந்தது. இந்த தண்டனையிலிருந்து விடுபடும் போக்கானது தடுப்புக்காவலின் கீழான சித்திரவதைச் சம்பவங்கள் மேலும் தீவிரமடைவதற்கே வழிகோலுகின்றது.

இக்குற்றங்களைப் பொறுத்தமட்டில், இலங்கையின் உள்ளக நீதிப் பொறிமுறையில் எவ்வித ஆக்கபூர்வமான முன்னேற்றமும் இல்லாத நிலையில், சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றே பாதிக்கப்பட்ட மக்களுக்கான ஒரே தெரிவாக எஞ்சியுள்ளது. இலங்கை ரோம் சாசனத்தில் கையெழுத்திடாத காரணத்தினால், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் அதிகார வரம்பெல்லை இங்கு வெகுவாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறானதொரு பின்னணியில், சித்திரவதைகளுக்கு எதிரான பிரகடனத்தை ஏற்றுக்கொண்ட ஏனைய உறுப்பு நாடுகள், இப்பிரகடனத்தின் வரைமுறைகளை மீறியமைக்காக இலங்கைக்கு எதிராக அந்தப் பிரகடனத்தின் 30 ஆவது உறுப்புரையைப் பிரயோகித்து, சர்வதேச மட்டத்தில் சட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க முன்வர வேண்டும்.” – என்று அந்தக் கூட்டறிக்கையில் விரிவாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22ஆவது திருத்தம் குறித்து ஐக்கிய நாடுகள் சபைக்கு அரசாங்கத்தின் பதில்

நீதிபதிகளின் ஓய்வு வயதை நீடிக்கவும், நீதிபதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் முன்மொழியப்பட்டுள்ள திருத்தமானது நீதித்துறையின் சுதந்திரத்தில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாது என இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. நீதிபதிகள் மற்றும்…

62 0 0
இலங்கை செய்திகள்

மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் தீர்த்தோற்சவம் இன்று இடம்பெற்றது

இலங்கையின் சின்னக்கதிர்காமம் எனப் போற்றப்படும் மட்டக்களப்பு மண்டூர் கந்தசுவாமி ஆலயத்தின் பழமை மிகு தீர்த்தோற்சவம் இன்று பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடைசூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது. இலங்கையில் கதிர்காமத்தின் காலத்தினை…

66 0 0
இலங்கை செய்திகள்

மணல்காட்டில் பற்றி எரியும் சவுக்கங்காடு!

யாழ்ப்பாணம் வடமராட்சிக் கிழக்கு மணக்காடு பகுதியில் சவுக்கம் காட்டிற்கு விஷமிகளால் தீ வைக்கப்பட்ட நிலையில் தற்போது பல ஏக்கர் பரப்பளவில் சவுக்கம் காடு பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.…

85 0 0
இலங்கை செய்திகள்

பருத்தித்துறையில் உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 இல் போராட்டம்

பருத்தித்துறை நகரின் வளர்ச்சிக்கு தடையாக உள்ள இராணுவ முகாம்களை அகற்ற வலியுறுத்தி செப்டெம்பர் 11 ஆம் திகதி நகரசபையினால் பருத்தித்துறையில் நடாத்தப்பட உள்ள பெரும் போராட்டத்தில் அரசியல்,…

83 0 0