ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு கல்கிசை நீதவான் காஞ்சனா என். சில்வா இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் காணப்படுவதால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இன்று (19) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்குடன் தொடர்புடைய நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவு இல்லாமையினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி அன்றைய கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.
ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.
பின்னர், அவரது தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.
எனினும், தற்பொழுது புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.










