அரசின் மீதான மக்களின் நம்பிக்கை முற்றிலும் இழக்கப்பட்டு, அவநம்பிக்கையே மேலோங்கியுள்ளது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.
பொய்ப் பிரச்சாரங்களை மேற்கொண்டு ஆட்சியைப் பிடித்த தற்போதைய அரசு, பதவியில் இருக்கும் போதும் தொடர்ந்து பொய்களையே கூறி வருகின்றது என்றும் அவர் குற்றம் சாட்டினார்.
நேற்று இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இந்தக் கருத்துக்களை முன்வைத்தார்.
அங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
“உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய வெடிகுண்டுதாரிகள், மக்கள் விடுதலை முன்னணியின் தேசியப்பட்டியலில் இருந்தார்களே தவிர, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அல்ல. இந்தப் பயங்கரவாதிகளுக்காக நீதிமன்றத்தில் முன்னின்ற சட்டத்தரணிகள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்கள், யாருக்கு வாக்களித்தார்கள் என்பதை ஆராய்ந்தால் உண்மை வெளிவரும்.
அன்று இந்த விசாரணை கோப்புகளை மூடிமறைத்த அதிகாரிகளுக்கு இன்று அரசு உயர் பதவிகளை வழங்கியுள்ளது. கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்காகவே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறுபவர்கள், அதற்காக ஜே.வி.பியின் தேசியப்பட்டியல் உறுப்பினர்களே வேலை செய்துள்ளார்கள் என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும்.
அரசின் தவறான பொருளாதாரக் கொள்கையால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரமும், குறிப்பாக அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நெல் உற்பத்தி செய்யும் விவசாயிகள் தங்களது நெல்லுக்குரிய நியாயமான விலையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு உறுதியளித்தபடி உர மானியத்தையோ அல்லது உரிய நேரத்தில் உரத்தையோ வழங்கவில்லை. சிறுபோகத்துக்கான உரமும் இன்றி, பெரும்போகத்துக்கான முறையான திட்டமும் அரசிடம் இல்லை. வங்கிக் கடன்களைப் பெற்று நெல் கொள்வனவு செய்த சிறிய மற்றும் நடுத்தர அரிசி ஆலை உரிமையாளர்கள் தங்களது அரிசியை விற்க முடியாமல் ஆலைகளை மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
‘Rebuild Sri Lanka’ என்ற பெயரில் நிதி ஒன்று உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்ட போதிலும், நாடாளுமன்ற நிதிக் குழுவின் செயலாளர் அவ்வாறானதொரு நிதியம் உருவாக்கப்படவே இல்லை எனக் குறிப்பிட்டுள்ளார். அவ்வாறாயின் அந்த நிதிக்காகச் சேர்ந்த பணம் எங்கே போனது என்ற கேள்வி எழுகின்றது. அரசின் கணக்குகளில் இருந்து தவறான கணக்குகளுக்குப் பணம் பரிமாற்றப்படும் போதெல்லாம், யாரோ ‘ஹேக்’ செய்துவிட்டார்கள் அல்லது தொழில்நுட்பத் தவறு என்று அரசு சாக்குப்போக்குக் கூறுகின்றது.
சாதாரண கிராமத்து மனிதன் தனது கணக்கில் சிறிய தொகையொன்றை வைப்புச் செய்தால், வரி கோப்புகள் மற்றும் ஆயிரத்தெட்டு கேள்விகளைக் கேட்கும் அரசு, பெரிய தொழிலதிபர்களுடன் தொடர்புடைய தவறான கணக்குகளுக்குக் கோடிக்கணக்கான பணம் செல்லும் போது எந்தக் கேள்வியும் எழுப்புவதில்லை.
பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாகக் கூறி ஆட்சிக்கு வந்த அரசு, இன்று அவர்களுக்குத் தனியார் துறையிலாவது ஒரு சாதாரண வேலைவாய்ப்பைப் பெற்றுக்கொடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவது ஒருபுறமிருக்க, நாட்டில் இயங்கி வரும் தொழிற்சாலைகளும் நாளாந்தம் மூடப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக முதலீட்டாளர்கள் இலங்கையை விட்டு வெளியேறி வருவதுடன், வேலைவாய்ப்பின்மை விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. தற்போது இருக்கும் வேலைகளையாவது பாதுகாத்துக்கொள்ள முடியாத பலவீனமான நிலையிலேயே இந்த அரசு உள்ளது.” – என்றார்.










