மட்டக்களப்பு நகரின் புறநகர் பாடசாலையாக இருந்து நகர்ப்புற பாடசாலைகளுக்கு இணையாக தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் சாதனை படைத்த மாணவர்களுக்கு நேற்று(03)பாடசாலை சமூகத்தினால் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட புதூர் விக்னேஸ்வரா மகா வித்தியாலத்திலிருந்து தேசிய ரீதியான, மாகாண ரீதியான போட்டிகளில் கலந்துகொண்டு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் சாதனையினை நிலைநாட்டியுள்ளது.
இந்த சாதனை நிலைநாட்டிய மாணவர்கள் மற்றும் அதற்கு வழியேற்படுத்திய பாடசாலை அதிபர் க.நிரஞ்சன், ஆசிரியர்கள் ஊர்வலமாக பாடசாலைக்கு அழைத்துவரப்பட்டனர்.
இந்த நிகழ்வில் பாடசாலையின் பழைய மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினர், பெற்றோர் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
தேசிய மட்டத்தில் கல்வி அமைச்சும் டவர் நாடக மன்றமும் இணைந்து வழங்கிய குறுநாடகப் போட்டி தேசிய மட்டத்தில் மூன்றாவது இடம்பெற்றது. அதில் மேலும் நான்கு விருதுகளையும் பெற்றுக்கொண்டது.
இதேபோன்று செல்வன் ம.நிதேஷ் அவர்கள் தேசிய மட்டத்தில் நடைபெற்ற சமூக விஞ்ஞான போட்டியில் முதல் பத்து இடங்களுக்குள் ஏழாவது இடத்தைப் பெற்று தேசிய மட்டத்தில் சாதனை புரிந்திருக்கின்றார்.
மார்ட்டின் விக்ரமசிங்க கட்டுரை போட்டியில் மாணவி செல்வி மதுஷாணி அவர்கள், தேசிய மட்டத்தில் ஏழாவது இடத்தைப் பெற்று பாடசாலைக்கும் வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார். கிழக்கு மாகாண விழிப்புணர்வு நாடக விழாவில் பங்கேற்று, மாகாண மட்டத்தில் இரண்டாவது இடத்தைப் நாடக்குழு பெற்றுள்ளது.
கடந்த வருடம் எங்களுடைய பாடசாலை தேசிய ரீதியில் மூன்று நிகழ்வுகளிலும், மாகாண ரீதியில் ஒரு நிலையிலும் இடங்களைப் பெற்று, வலயத்தில் ஒரு சிறந்த நிலைக்கு வந்திருப்பதாக பாடசாலையின் அதிபர் க.நிரஞ்சன் தெரிவித்தார்.












