ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வீடு ஒன்றில் தனிமையில் இருந்த 11 வயது சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தர மறுத்த காரணத்தால் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் வீசிய சம்பவம் தொடர்பாக 14 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கடந்த வியாழக்கிழமை (28) மாலையில் ஏறாவூர் 5 பிரிவு நீதிமன்ற வீதியைச் சேர்ந்த சத்யானந்தன் சதிஷா,என்ற சிறுமி குளியலறை தண்ணீர் தொட்டியில் விழுந்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.
குறித்த சிறுமியின் தாயார் வெளிநாட்டுக்கு வேலைவாய்ப்பு பெற்று சென்றுள்ளதுடன் தந்தையார் சம்பவ தினத்தன்று வேலைக்காக வெளியில் சென்றுள்ள நிலையில் 14 வயது சகோதரனும் 11 வயது சகோதரியும் தனியாக வீட்டில் இருந்துள்ளனர்.
இந்த நிலையில் சகோதரி வைத்திருந்த கையடக்க தொலைபேசியை தருமாறும் டிக் டாக் பார்க்க வேண்டும் என்றும் சகோதரன் கேட்டுக் கொண்டார் .
அதற்கு சகோதரி கையடக்க தொலைபேசியை கொடுக்க மறுத்துள்ள நிலையில் இருவருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்ட நிலையில் சகோதரியின் கழுத்தை நெரித்ததையடுத்து அவர் உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து சகோதரியை இழுத்து சென்று குளியலறையில் உள்ள தண்ணீர் தொட்டியில் போட்டுவிட்டு ஒன்றும் தெரியாது போல வீட்டில் இருந்து பக்கத்து வீட்டுக்கு சென்றுள்ளார்.
அதே நேரம் வெளியில் இருந்து வீட்டுக்கு வந்த தந்தை வீட்டில் பிள்ளைகளை காணவில்லை என தேடிய போது குளியலறை தண்ணீர் தொட்டியில் 11 வயது மக்கள் வீழ்ந்து மயங்கி கிடப்பதைக் கண்டு அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போது அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளபிசினர்.
இவ்வாறான நிலையில் 14 வயது சிறுவன் மீது சந்தேகம் கொண்ட பொலிசார் தொடர்ந்து மேற்கொண்ட விசாரணைகளில் சிறுவன் சகோதரியை கொலை செய்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து குறித்த சிறுவனை கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்து வருவதாக பொலிசார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர் பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.










