இலங்கைத் தமிழரசுக் கட்சி தனது தனித்துவத்தை முழுமையாகப் பேணி, தமிழ் மக்களின் நலனை மட்டுமே முன்னிறுத்திச் செயற்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அரசு முன்னெடுக்கும் சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, தவறுகளைச் சுட்டிக்காட்ட தமது ஒருபோதும் தயங்காது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டக்களப்பு மாநகர சபைக்கு உட்பட்ட பொது நூலகக் கட்டடத் திறப்பு விழாவில் அவர் ஆற்றிய உரை குறித்துச் சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன.
அவற்றுக்குப் பதிலளித்து, அவர் வெளியிட்டுள்ள விளக்கத்திலேயே இவ்விடயங்களைக் குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க ஆயுதக் கலாசாரப் பின்னணியிலிருந்து வந்தவராவார்.
அதேபோன்று எமது தமிழ் மக்களும் தமது விடிவுக்காக ஆயுதமேந்திப் போராடியவர்களாவர்.
ஆகையினால், நாட்டில் மீண்டுமொரு யுத்தம் ஏற்படக்கூடாது என்று ஜனாதிபதி கூறிய கருத்தை நாமும் ஏற்றுக்கொள்வது நல்லதொரு விடயமாகும்.
ஆனால், அவ்வாறானதொரு யுத்த சூழ்நிலை நாட்டில் மீண்டும் உருவாகாமல் இருக்க வேண்டுமாயின், தமிழ் மக்களுக்கான அதிகாரங்கள் அர்த்தமுள்ள விதத்தில் விரைவாகப் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதை எனது உரையின் மூலம் நான் ஜனாதிபதியிடம் திட்டவட்டமாக வலியுறுத்தினேன்.” – என்றும் அப்பதிவில் குறிப்பிட்டுள்ளது.
மேலும், நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இலங்கைத் தமிழரசுக் கட்சி இயங்கி வருவதைச் சுட்டிக்காட்டிய அவர்,
கட்சியின் தற்போதைய இராஜதந்திர நிலைப்பாடு குறித்தும் விளக்கினார்.
சில எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராகப் பொதுவான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றன என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஆனால், தாங்கள் அந்தப் பின்னணியில் அவர்களுடன் இணைந்து கூட்டுச் சேர்ந்து இயங்கவில்லை என்றும்
தாம் தமது தனித்துவத்தைப் பேணியவாறு, மக்களின் நலனை மட்டுமே முதன்மைப்படுத்தி, அரசு செய்யக்கூடிய சிறந்த விடயங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
அதேபோன்று, அரசு செய்யாமல் தவிர்க்கின்ற மற்றும் தவறாகச் செய்கின்ற விடயங்களைச் சுட்டிக்காட்ட தாம் ஒருபோதும் தவறுவதே இல்லை என்றும் சுமந்திரன் விளக்கமளித்துள்ளார்.










