வலிகாமம் வடக்கு பகுதிகளில் உள்ள தங்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி, காணி உரிமையாளர்கள் தொடர்ந்தும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இராணுவத்தினரின் “கொமாண்டோ” பங்களா முன்பாக இன்று ஐந்தாவது வாரமாகவும் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வலிகாமம் வடக்கில் 249, 256, 248, 251 மற்றும் 255 ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், கடந்த 1990ஆம் ஆண்டு யுத்தம் காரணமாக தமது சொந்த இடங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர்.
அன்றிலிருந்து இன்று வரை சுமார் 36 வருடங்களாக அப்பகுதி உயர் பாதுகாப்பு வலயங்களாகவே பிரகடனப்படுத்தப்பட்டு இராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வருகின்றது.
யுத்தம் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்துவிட்ட போதிலும், தங்களின் சொந்த நிலங்களிலிருந்து பாதுகாப்புத் தரப்பினர் இன்னும் வெளியேறவில்லை என மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
உயர் பாதுகாப்பு வலயத்தில் உள்ள தங்களின் நிலங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, காணி உரிமையாளர்கள் கடந்த பல வருடங்களாகப் பல்வேறு வடிவங்களில் போராடி வருகின்றனர்.
எனினும், இதுவரை உரிய தீர்வு கிடைக்காத நிலையிலேயே, வாராந்தம் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் தொடர் போராட்டங்களை முன்னெடுப்பதாக மக்கள் தீர்மானித்து, இன்று 5 ஆவது வாரமாகவும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.
அத்துடன் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் வெசாக் பௌர்ணமி தினம் வரை, உயர்பாதுகாப்பு வலய எல்லைப் பகுதி முழுவதும் கறுப்புக்கொடிகளைப் பறக்கவிட்டுப் பாரிய அளவிலான எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக காணி உரிமையாளர்கள் இதன்போது அறிவித்தனர்.
இந்த நீதிக்கான போராட்டத்தில் கட்சி பேதமின்றி அனைத்து அரசியல்வாதிகளும், அரச நிர்வாக உத்தியோகத்தர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு தங்களுக்கு ஆதரவு வழங்க வேண்டும் என போராட்டக்காரர்கள் பகிரங்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இன்று நடைபெற்ற வாராந்தப் போராட்டத்தில் வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் நேரில் கலந்துகொண்டு, மக்களின் நில உரிமைப் போராட்டத்துக்குத் தனது முழுமையான ஆதரவைத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










