“நாட்டில் மீண்டும் ஒரு யுத்தச் சூழ்நிலை உருவானால், அதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான இந்த அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும். தமிழ் வாக்குகளை இலக்கு வைத்து அரசு முன்னெடுக்கும் தரம் தாழ்ந்த அரசியல் தேசியப் பாதுகாப்புக்குப் பெரும் அச்சுறுத்தலாகும்” – என்று முன்னாள் அமைச்சர் சரத் வீரசேகர எச்சரித்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு அநுர அரசு மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:- “முப்பதாண்டு கால யுத்தத்தின் போது சர்வதேச நாடுகள் பலவும் அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் போரை நிறுத்துமாறு கடுமையான அழுத்தங்களைப் பிரயோகித்தன. எனினும், அந்தப் பேரினவாத அழுத்தங்களுக்கு எக்காரணம் கொண்டும் பணியாது, அவர் உறுதியாக நின்று வரலாற்றுச் சிறப்புமிக்க யுத்த வெற்றியைப் பெற்றுக்கொடுத்தார். எனவே, இந்த வெற்றியின் முழுப் பொறுப்பும் கௌரவமும் அதற்கு அரசியல் தலைமைத்துவம் வழங்கிய மஹிந்த ராஜபக்ஷவையே சாரும்.
இந்த அரசு எமது இராணுவத்தினரைக் கௌரவிக்க அனுமதி மறுத்துள்ளது. ஆனால், பிரிவினைவாதப் புலிகளை நினைவேந்த அனுமதி வழங்கியுள்ளது. அமெரிக்கா அல்கொய்தாவையோ, இந்தியா ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பையோ நினைவுகூர அனுமதிப்பதில்லை.
நாட்டை மீட்டெடுத்த மஹிந்த ராஜபக்ஷவை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்து அகற்றி, எவ்விதக் குற்றச்சாட்டும் இன்றி இந்த மாதத்தில் லஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அழைத்துச் சென்று அவமதிப்பு செய்ய முற்பட்டுள்ளனர். புலம்பெயர் தமிழர்களைத் திருப்திப்படுத்துவதற்காகவே, யுத்த காலத்தில் உளவுத்துறையை வழிநடத்திய சுரேஷ் சலே, பிள்ளையான் மற்றும் முக்கிய பாதுகாப்புப் பிரதானிகளைக் கைது செய்து பழிவாங்கியுள்ளனர்.
தமிழகத்தில் புதிதாகப் பதவியேற்றுள்ள முதலமைச்சர் விஜய்க்கு, மே 18 ஆம் திகதியை ‘தமிழ் இனப்படுகொலை நாளாக’ பிரகடனப்படுத்துமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடிதம் அனுப்பியுள்ளார். ஆனால் உண்மை என்னவெனில், தமிழர்களைப் பேரழிவில் இருந்து காப்பாற்றியதே எமது இராணுவம்தான்.
யுத்தத்தின் இறுதித் தருணத்தில் பிரபாகரன் சுமார் 3 இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை மனிதக் கேடயமாகப் பயன்படுத்தியபோது, எமது இராணுவத்தினர் 2 இலட்சத்து 95 ஆயிரம் மக்களின் உயிர்களைப் பத்திரமாக மீட்டுத்தான் யுத்தத்தை வென்றனர். உலக வரலாற்றில் இத்தனை பணயக்கைதிகளை மீட்ட இராணுவம் எங்குமில்லை.
அன்று இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியமர்த்தும் போதோ, சிறுவர்களுக்கு ஒரு யோகட்டையோ அல்லது கண்ணிவெடிகளை அகற்றிய இராணுவத்தினருக்கு ஒரு தேநீரையோ வழங்க இந்தத் தமிழ் அரசியல்வாதிகள் யாரும் வரவில்லை. இன்று வரை வடக்கில் தமிழ் மக்களுக்கு அவசரமாக இரத்தம் தேவைப்படும் போது எமது இராணுவத்தினரே இரத்தம் வழங்குகின்றார்கள். இத்தகைய துரோகத் தனமான அரசியல்வாதிகள் மக்களைத் தூண்டிவிட்டு அரசியல் செய்வதற்கும், அதற்கு இந்த அரசு இடமளிப்பதற்கும் எனது கடுமையான கண்டனங்களை வெளியிடுகின்றேன்.” – என்றார்.










