திருமுறுகண்டி கோவிலின் வருமானம் முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கே பயன்படுத்தப்பட வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் தெரிவித்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று (14.05.2026) இடம்பெற்றது.
இதன்போது கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
முல்லைத்தீவு மாவட்டத்தின் திருமுறுகண்டி கோவிலுக்கு கிடைக்கின்ற வருமானங்கள் அனைத்தும் தற்போது பெளத்தசாசன அமைச்சிற்கே செல்கின்றது. குறித்த ஆலயமானது நீதிமன்ற வழக்கில் உள்ள ஓர் ஆலயமாகும். வருடாந்தம் பல மில்லியன் ரூபாய் இவ்வாலயத்திற்கு வருமானமாக கிடைக்கின்றது. அவ்வாறு கிடைக்கப்பெறும் வருமானங்கள் பெளத்தசாசன அமைச்சிற்கு செல்வதுடன் அவை மீண்டும் வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு கூட திரும்பி வருவதில்லை. குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்பட்ட பணமானது வெவ்வேறு தேவைகளுக்காக வடக்கு மாகாணத்திற்கு வெளியே பயன்படுத்தப்படும் நிலை காணப்படுகின்றது.
அவ்வாறில்லாமல், குறித்த ஆலயத்தின் மூலம் வருமானமாக பெறப்படுகின்ற பணமானது முல்லைத்தீவு மாவட்டத்தின் அபிவிருத்திக்கு பயன்படுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படும் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உள்ளிட்ட உள்ளூராட்சி சபைகள் மிகவும் வருமானம் குறைந்த சபைகளாகும். அவற்றின் அபிவிருத்திசார் செயற்பாடுகளுக்கு இப்பணம் பயன்படுத்தப்பட வேண்டும். மேலும் மாவட்டத்தில் வேறு அபிவிருத்தி சார்ந்த செயற்பாடுகளுக்கும் அதனை பயன்படுத்தலாம். அதனை இந்த சபை இன்று தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும்.
அத்துடன் ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்கான தனிப் பிரதேசசபையினை அமைக்க வேண்டும் என பலரும் கடந்த காலங்களில் பேசியிருந்தனர். இது தொடர்பில் நாடாளுமன்றத்தின் விசேட உரையொன்றின் மூலம் நான் குறித்த கோரிக்கையினை அரசாங்கத்திற்கு முன்வைத்திருந்தேன். இந்த பிரதேச அபிவிருத்திக் குழுவின் தலைவரும் இப்பகுதியை சேர்ந்தவர் எனும் வகையில் குறித்த விடயத்தை இன்றைய கூட்டத்தின் தீர்மானமாக நிறைவேற்றி அவருக்கு முன்னிலைப்படுத்துவதுடன் அரசாங்கத்திற்கும் அனுப்பிவைப்போம். இது தொடர்பில் விசேட கரிசனையெடுத்து செயற்படுமாறு தலைவரை கேட்டுக்கொள்கின்றேன்.
அத்தோடு அண்மையில் காணி அமைச்சர் கே.டி.லால்காந்த கலந்துகொண்ட வன்னி மாவட்டத்திற்கான கூட்டமொன்றில் அவரால் தெரிவிக்கப்பட்டதற்கமைவாக, அரச திணைக்களங்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் அல்லது தனியாருக்கு சொந்தமான காணிகளுக்கு அதற்குரிய ஏதேனும் ஆவணங்கள் இருப்பின் அவற்றை கிராம சேவையாளர் ஊடாக பிரதேச செயலாளருக்கு வழங்கி அவற்றின் தொகுப்பினை மாவட்ட அபிவிருத்திக் குழுவிற்கு காணி விடுவிப்புக்கான முன்மொழிவாக வழங்கவேண்டும் எனும் தீர்மானத்தினையும் இக்கூட்டத்தில் முன்மொழிகின்றேன் என தெரிவித்தார்.










