பாதாள உலகக் கும்பல் தலைவரான கணேமுல்ல சஞ்சீவ என்பவரைத் திட்டமிட்டு கொலை செய்யவதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில், ஒஸ்மண்ட் குணசேகர எனப்படும் “கம்பஹா ஒஸ்மண்ட் ” என்பவர் கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கம்பஹா பகுதியைச் சேர்ந்த 69 வயதுடையவர் ஆவார்.
2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு இலக்கம் 05 நீதவான் நீதிமன்ற மண்டபத்திற்குள் சட்டத்தரணி போல வேடமணிந்து வந்த நபரொருவர், சிறைச்சாலையிலிருந்து அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அவரைக் கொலை செய்திருந்தார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில், நேற்று புதன்கிழமை (13) இரவு கம்பஹா, ஸ்ரீ போதி வீதி பகுதியில் வைத்து ‘கம்பஹா ஒஸ்மண்ட்’ கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் பாதாள உலகக் கும்பல் தலைவர்களுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டுள்ளது.
இந்தக் கொலையைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கியமை மற்றும் ஏனைய உதவிகளை வழங்கியதன் மூலமும் சந்தேக நபர் இந்தச் சதித்திட்டத்தில் நேரடியாகப் பங்கெடுத்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட போது சந்தேக நபரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட ரீபீட்டர் ரக துப்பாக்கி ஒன்று, 10 ரவைகள் மற்றும் 2 மகசீன்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
கொழும்பு குற்றஒழிப்பு பிரிவினர் இக்கொலைச் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.










