மலையக மக்களின் அரசியல், சமூக மற்றும் பொருளாதார விடுதலைக்கு அறவழியில் எழும் மக்கள் எழுச்சியே நிலையான தீர்வைப் பெற்றுத்தரும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கண்டி மாவட்ட காணி உரிமைக்கான தலைவருமான எம்.வேலுகுமார் தெரிவித்தார்.
வெறும் அரசியல் மேடைப் பேச்சுகளால் மட்டும் மாற்றத்தைக் கொண்டுவர முடியாது என்று சுட்டிக்காட்டிய அவர், காணி உரிமைக்கான தெளிவான தீர்வுப் பொறிமுறையை மக்கள் மயப்படுத்த வேண்டிய தருணம் இதுவென்றும் வலியுறுத்தினார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில்,
“காணி உரிமை பற்றிப் பேசுவது வரவேற்கத்தக்கது. ஆனால், இன்னும் எத்தனை காலம்தான் பேசிக்கொண்டே இருக்கப் போகின்றோம்? இப்போது பேசுவதற்கான நேரமல்ல, திட்டமிட்ட பொறிமுறையின் ஊடாக தீர்வைப் பெறுவதற்கான காலம்.
நாடாளுமன்றத்திலுள்ள மலையகப் பிரதிநிதிகள் தற்போதைய ‘ட்ரென்ட்’ அரசியலைப் பின் தொடர்வதைத் தவிர்த்து, மக்களின் உண்மையான விடுதலைக்கான அரசியலை முன்னெடுக்க வேண்டும்.
மலையகத்தின் எதிர்காலச் சந்ததியினருக்கு முறையான காணி உரிமையையும், கௌரவமான வாழ்வையும் பெற்றுக்கொடுக்க இளைஞர்களும், சிவில் அமைப்புகளும் அரசியல்வாதிகளுக்குத் தகுந்த அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
ஜனநாயக ரீதியான அறவழி எழுச்சி ஒன்றே நம் முன்னே இருக்கும் தடைகளைத் தகர்க்கும். மக்களின் இந்த எழுச்சியே மூடியிருக்கும் விடுதலையின் கதவுகளைத் திறக்கும் சாவியாக அமையும்.” – என்றார்.
மலையகப் பகுதிகளில் காணி உரிமை தொடர்பான கோரிக்கைகள் வலுப்பெற்று வரும் சூழலில், வேலுகுமாரின் இந்த அறிக்கை அரசியல் களத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.










