ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான பிரேத பரிசோதனை அறிக்கை, நாளை திங்கட்கிழமை கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
கோட்டை நீதிவானின் உத்தரவுக்கு அமைவாக, கொழும்பு பிரதான சட்ட வைத்திய அதிகாரி ஸ்ரீயந்த அமரரத்ன தலைமையிலான ஐவர் கொண்ட விசேட மருத்துவக் குழுவினர் நேற்றுமுன்தினம் இந்தப் பிரேத பரிசோதனையை முன்னெடுத்தனர். கொழும்பு சட்ட வைத்திய மற்றும் நச்சு ஆய்வியல் நிலையத்தில் நடைபெற்ற இந்தச் சோதனையின் முடிவுகள், மரண விசாரணைக்கான முக்கிய நிபுணத்துவ சான்றாக அமையவுள்ளது.
கபில சந்திரசேனவின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகள், கொள்ளுப்பிட்டி பொலிஸாரிடமிருந்து உடனடியாக கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு மாற்றப்பட்டுள்ளது. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இந்திக்க லொக்குஹெட்டியின் நேரடி மேற்பார்வையில் விசேட குழுவொன்று இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்தில் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சர்ச்சைக்குரிய எயார்பஸ் விமானக் கொள்வனவு ஊழல் வழக்கு தொடர்பாக 54 நாள்கள் விளக்கமறியலில் இருந்து பிணையில் வந்திருந்த கபில சந்திரசேனவை, மீண்டும் கைது செய்யுமாறு கடந்த 7ஆம் திகதி நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இவ்வாறானதொரு பின்னணியிலேயே, கடந்த 8ஆம் திகதி (நேற்றுமுன்தினம்) காலை கொள்ளுப்பிட்டி பேதரிஸ் மாவத்தையில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் அரவிந்த டி சில்வாவின் வீட்டில் இருந்து அவர் சடலமாக மீட்கப்பட்டார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கியஸ்தர்களுக்கு இந்த வழக்கில் அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ள சூழலில், கபில சந்திரசேனவின் மரண பரிசோதனை அறிக்கை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.










