“நாட்டின் முதலாம் பிரஜையான ஜனாதிபதிக்கு மேல், பெலவத்தையில் ஒரு ‘பூஜ்ஜிய பிரஜை’ இருந்து கொண்டு உத்தரவுகளைப் பிறப்பிக்கின்றார்” என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
திறைசேரி அதிகாரி ரங்க ராஜபக்ஷவின் மரணம் தொடர்பாக, நேற்று சனிக்கிழமை குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் அளித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
ரங்க ராஜபக்ஷவின் மரணம் சந்தேகத்துக்குரியது என அவரது மனைவி முறைப்பாடு செய்துள்ளதாகத் தான் குறிப்பிட்ட கருத்து, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உத்தியோகபூர்வ கடிதத்தை அடிப்படையாகக் கொண்டது என்று கம்மன்பில விளக்கமளித்தார்.
“மரண பரிசோதனைக் குழுவை நியமிக்கும் கடிதத்தில், ‘மனைவி முறைப்பாடு செய்துள்ளார்’ என ஆங்கிலத்தில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. பொலிஸாருக்கு ஆங்கிலம் விளங்கும், ஆனால் பெலவத்தையில் இருக்கும் அந்த பூஜ்ஜிய பிரஜைக்குத்தான் ஆங்கிலம் விளங்கவில்லை” என்றும் அவர் சாடினார்.
பிரேத பரிசோதனை அறிக்கையைத் தான் ஏற்காததற்கான ஐந்து காரணங்களை பொலிஸாரிடம் முன்வைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், ஒரு மரணம் குறித்துச் சந்தேகம் எழுப்ப மனைவிக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதில்லை, நாட்டின் எந்தவொரு குடிமகனுக்கும் அந்த உரிமை உண்டு என்றும் சுட்டிக்காட்டினார்.
“கபில சந்திரசேன இறப்பதற்கு முன்னர், இலஞ்ச, ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தன்னைத் தூக்கிலிடுமாறு அச்சுறுத்தியதாகத் தனது சத்தியக் கடதாசியில் குறிப்பிட்டுள்ளார். குளியாப்பிட்டிய பொலிஸார் அவ்வாறு நடந்துகொள்ளாமல் இருப்பது மகிழ்ச்சியளிக்கின்றது” என்றும் அவர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தி அரசு தங்களை அலைக்கழித்து சோர்ந்து போகச் செய்ய முயற்சிப்பதாகவும், ஆனால் இத்தகைய அச்சுறுத்தல்களுக்கு அஞ்சித் தனது அரசியல் பயணத்தை நிறுத்தப் போவதில்லை என்றும் உதய கம்மன்பில இதன்போது சூளுரைத்தார்.










