பருத்தித்துறை நகரசபையின் தடையை மீறி உணவுப் பொதியிடலுக்கு ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்திய மற்றும் சுகாதார சீர்கேடுகளுடன் இயங்கிய உணவகத்திற்கு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து அதிரடி உத்தரவிட்டுள்ளது.
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில், வீடொன்றில் அனுமதியின்றி உணவு கையாளும் நிலையம் இயங்குவதாகவும், அங்கு சட்டவிரோதமாக லஞ்சீட் பயன்படுத்தப்படுவதாகவும் பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸுக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. இதனடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனையின் போது பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
சோதனையின் போது பின்வரும் சட்டவிரோதச் செயல்கள் உறுதி செய்யப்பட்டன.
- நகர சபையின் அனுமதி மற்றும் உணவு வளவுப்பதிவு சான்றிதழ் இன்றி இயங்கியமை.
- உணவு பொதியிடலுக்கு தடைசெய்யப்பட்ட ‘லஞ்ச் சீட்’ பயன்படுத்தியமை.
- உணவுத் தயாரிப்புக்குப் பயன்படும் நீர் பாதுகாப்பானது என்பதை உறுதிப்படுத்தத் தவறியமை.
- பணியாளர்களுக்கு மருத்துவச் சான்றிதழ் இல்லாமை மற்றும் தனிநபர் சுகாதாரம் பேணப்படாமை.
- சுற்றுச்சூழலை பாதிப்புக்குள்ளாகக்கூடிய பாதுகாப்பற்ற சூழலில் உணவு உற்பத்தி செய்தமை.
இது தொடர்பாக பொதுச்சுகாதார பரிசோதகர் ப.தினேஸினால் பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற விசாரணையின் போது, உரிமையாளர் தனது குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொண்டார்.
இதனையடுத்து, அவருக்குக் கடும் எச்சரிக்கை விடுத்த நீதிவான், ஒரு இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்துத் தீர்ப்பளித்தார்.
பருத்தித்துறை நகரசபை எல்லைக்குள் கடந்த 01.01.2026 முதல் உணவகங்கள், திருமண மண்டபங்கள் மற்றும் வீடுகளில் நடைபெறும் பொது நிகழ்வுகளில் லஞ்ச் சீட் பயன்படுத்துவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தத் தடையை மீறுவோருக்கு எதிராகக் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர சபை மீண்டும் எச்சரித்துள்ளது.












