சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையின் சேவைகளை மேம்படுத்துவது மற்றும் அபிவிருத்திப் பணிகள் குறித்த களஆய்வு நடவடிக்கைகளை முன்னெடுக்கும் நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீன் நேற்று வியாழக்கிழமை(07) அவ்வைத்தியசாலைக்குத் திடீர் விஜயமொன்றை மேற்கொண்டார்.
இந்த விஜயத்தின் போது, வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட பல்வேறு பிரிவுகளுக்கும் நேரில் சென்ற பணிப்பாளர், அங்கு நோயாளர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் மற்றும் அலகுகளின் செயற்பாடுகள் குறித்து கேட்டறிந்து கொண்டதுடன் குறைபாடுகளையும் நேரில் அவதானித்தார்.
அதனைத் தொடர்ந்து, வைத்தியசாலையின் அத்தியட்சகர் டீ.பிரபாசங்கர் மற்றும் பொது வைத்திய நிபுணர் வைத்தியர் ஐ.எல்.எம்.சபீக், திட்டமிடல் பொறுப்பு வைத்தியர் வைத்தியர் ஏ.ஆர்.நியாஸ் அஹமட், கணக்காளர் எஸ்.திருப்பிரகாசம் உள்ளிட்ட உத்தியோகத்தர்களுடன் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.
இதன்போது, வைத்தியசாலையின் எதிர்கால அபிவிருத்திப் பணிகள் மற்றும் பொதுமக்களுக்கான சுகாதார சேவைகளை மேலும் வினைத்திறனாக முன்னெடுப்பது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தினை மக்கள் பாவனைக்கு விரைவாகக் கையளிப்பதற்கும், மகப்பேற்று விடுதியினை புதிய கட்டிடத்துக்கு மாற்றுவதற்கும் உரிய ஒழுங்குகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு பிராந்திய பணிப்பாளர் வைத்தியசாலை நிர்வாகத்தினருக்கு இதன்போது பணிப்புரை விடுத்தார்.
வைத்தியசாலையின் கண் சிகிச்சை விடுதிக்கு (Eye Ward) தேவையான அத்தியாவசிய தளபாடங்களை பிராந்திய பணிப்பாளர் இதன்போது கையளித்தார்.
இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய கண்காணிப்பு மற்றும் மதிப்பீட்டு பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர் எம்.சீ.எம்.மாஹிர் உட்பட வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.














