ஈரானை உலக வரைபடத்திலிருந்து அகற்றும் நிலை உருவாகும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணையிலோ அல்லது பாரசீக வளைகுடா பிராந்தியத்திலோ உள்ள அமெரிக்கக் கப்பல்களை இலக்கு வைக்க முயன்றால் இந்த நிலைமை ஏற்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய தொலைபேசி நேர்காணலின் போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் முன்னரை விட இப்போது நெகிழ்வுத்தன்மையுடன் இருக்கிறது.
இதற்கு முன்னரும் டிரம்ப் இவ்வாறான அச்சுறுத்தல்களை விடுத்திருந்ததுடன், கடந்த மாதம் சமூக வலைத்தளங்கள் வாயிலாக ஒரு முழு நாகரிகமே அழிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணை ஊடாக பயணிக்க முயன்ற கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதை அடுத்து, அமெரிக்க இராணுவத்தால் ஏழு ஈரானிய படகுகள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக ட்ரம்ப் ‘ட்ரூத் வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
அத்துடன் நல்லெண்ணத்தின் அடிப்படையில் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவது, மீண்டும் இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பிப்பது ஆகிய இரண்டு தெரிவுகளே உள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.










