மருதங்கேணி பொலிஸ் காரியாலய மண்டபத்தில் இன்று (03.05.2026) பொலிஸ் அதிகாரிகள், கிராம சேவையாளர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர்கள் பங்கேற்ற விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் அண்மைக்காலமாக சமூகத்தில் இடம்பெற்று வரும் முக்கிய குற்றச் செயல்கள் மற்றும் அவற்றுக்கெதிரான சட்ட நடவடிக்கைகள் குறித்து பொலிஸ் உதவி அத்தியட்சகர் (ASP) மற்றும் நிலையப் பொறுப்பதிகாரி (OIC) ஆகியோர் விரிவான விளக்கங்களை வழங்கினர்.
இக்கூட்டத்தில் எட்டப்பட்ட முக்கிய தீர்மானங்கள் பின்வருமாறு:-
AI தொழில்நுட்பத் தவறுகளும் விழிப்புணர்வும்
வடமராட்சி கிழக்கிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவர்கள் AI (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்தியமை கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக ஏற்கனவே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் இவ்வாறான குற்றங்களைத் தடுக்க பாடசாலை ரீதியாக மாணவர்களுக்குப் போதிய சட்ட விழிப்புணர்வுகளை வழங்கத் தீர்மானிக்கப்பட்டது.
கிராமங்களுக்கு வெளிமாவட்டங்களில் இருந்து வேலைக்காக அழைத்து வரப்படும் நபர்கள் தொடர்பான கண்காணிப்பைத் தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, வேலைக்கு அமர்த்தப்படுபவர்களின் தேசிய அடையாள அட்டைப் பிரதி மற்றும் முழுமையான விபரங்களை அந்தந்த பொலிஸ் நிலையங்களில் கட்டாயம் சமர்ப்பித்து பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத கஞ்சா, கசிப்பு உள்ளிட்ட போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பயன்பாட்டில் ஈடுபடுபவர்களைத் தராதரம் பார்க்காமல் கைது செய்து, உடனடியாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளனர்.
மணற்காட்டுச் சவுக்க மரத்தோப்பிற்குச் சட்டவிரோதமாகத் தீ மூட்டி, விறகு சேகரிக்கும் செயல்கள் அதிகரித்துள்ளன. இவ்வாறான இயற்கை வளச் சுரண்டல்களைத் தடுக்கவும், காட்டைப் பாதுகாக்கவும் விசேட கண்காணிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
சிறுவர் துஷ்பிரயோகத் தடுப்பு
18 வயதிற்குக் குறைந்த சிறுமிகள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படும் போது, அக்குற்றத்தை மறைப்பவர்கள் அல்லது குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்து ஊக்குவிப்பவர்கள் என அனைவரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவர். இதனைத் தடுக்க பிரதேச குடும்ப நல உத்தியோகத்தர்களுடன் இணைந்து கிராம மட்டத்தில் விழிப்புணர்வு கருத்தரங்குகளை நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.
கரையோரக் கண்காணிப்பு மற்றும் ஆள் கடத்தல் தடுப்பு
சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, கரையோரங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்பவர்களைத் தடுக்கக் கிராம சேவையாளர்களுடன் இணைந்து பொலிஸார் விசேட கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர். கரையோரப் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோதப் பயணங்களைத் தடுத்தல் குறித்து இதன்போது விரிவாக ஆராயப்பட்டது.
இறுதியாக சமூக அமைதியைப் பேணவும், குற்றமற்ற பிரதேசமாக மருதங்கேணியை மாற்றவும் பொதுமக்கள் மற்றும் சிவில் குழுக்கள் பொலிஸாருக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என இக்கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.












