“செய்யறிவு உலகில் செம்மொழித் தமிழும் தமிழரும்” எனும் கருப்பொருளில் உலகத் தமிழ் ஆய்வு மாநாடு ஒன்று எதிர்வரும் ஒக்ரோபர் 10 ஆம் திகமுதல் 18 ஆம் திகதி வரை கனடா ரொரண்டோ மாநகரில் நடைபெற உள்ளதாக குறித்த நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது.
இம்மாநாடு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன், பேராசிரியர்களான முனைவர் அ சண்முகதாசு. முனைவர்கி விசாகரூபன். முனைவர் போல் ரொகான்
திருமதி விஜிதா திவாகரன் யாழ் ஊடக அமையத்தில் ஊடக சந்திப்பை முன்னெடுத்திருந்தனர்.
இதன்போது குறித்த மாநாடு, உலகம் முழுவதுமுள்ள அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் கல்வியாளர்களை ஒன்றிணைத்துச் செம்மொழித் தமிழ், செய்யறிவு, மெய்ப் பொருளியல், பண்பாடு, புலம்பெயர் வாழ்வு, உலகமயமாதல், வரலாறு, பொருண்மிய மேம்பாடு ஆகிய துறைகளின் இணையிசைவுகளை ஆராய்வதற்கான அறிவியற் தளமாக அமையவுள்ளதாகவும் தெரிவித்தனர்.
மேலும், தமிழ் அறிவியல் மரபுகளின் வரலாற்று ஆழத்தையும் இன்றைய உலகில் அவற்றின் சமகாலப் பொருத்தத்தையும் வெளிப்படுத்தும் பல்துறை உரையாடல்களை ஊக்குவிப்பதே இம்மாநாட்டின் நோக்கமாகும் என்றும் குறித்த ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கமைய – தமிழும் செய்யறிவும், மெய்ப்பொருளியலும் பண்பாடும்,
பொருளியல் சிந்தனையும் வாழ்வியலும், தமிழர் வரலாறும் வாழ்வியலும், வடகிழக்குப் பொருண்மிய மேம்பாடு உள்ளிட்ட தலைப்புகளில் ஆய்வுகளை கோரியுள்ளதுடன் அவை தமிழ் அல்லது ஆங்கிலம் மொழியில் அமையலாம் என்று தெரிவித்திருந்தனர்.
அத்துடன் குறித்த ஆய்வுச் சுருக்கம் 250-300 சொற்களில் அமைதல் வேண்டும் என்றும் அதைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் 2026.05.25 என்றும் தெரிவித்திருந்தனர்.
மேலும் அளிக்கப்படும் அனைத்து ஆய்வுச் சுருக்கங்களும் மாநாட்டு ஆய்வுக் குழுவினரால் விரிவாக ஆய்வு செய்யப்பட்டு, இந்த ஆய்வின் அடிப்படையில் தெரிவு செய்யப்படும் ஆய்வுச் சுருக்கங்களை எழுதியோர் ஆய்வுக் கட்டுரை எழுதுமாறு வேண்டப்படுவர்.
அனைத்து ஆய்வாளர்களுக்கும் அவரவர் ஆய்வுச் சுருக்கத் தேர்வு பற்றிய முடிவு 2026.06.30 ஆம் நாளுக்குள் அறிவிக்கப்படும்.
முழுமையான ஆய்வுக் கட்டுரைகள் 3000 சொற்களுக்கு மிகாமலும் ஒருங்குறி எழுத்துரு 12 அளவிலும் அமைதல் வேண்டும். இக்கட்டுரைகளை 2026.08.31 ஆம் நாளுக்கு முன் கிடைக்கக் கூடியதாக மேற்குறிப்பிட்ட இணைய தளத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவித்திருந்ததுடன்
தெரிவு செய்யப்படும் இலங்கை மற்றும் இந்தியக் கட்டுரையாளர்களுக்குக் கனடா சென்று வருவதற்கான வான்வழிச் செலவுச் சீட்டும் கனடாவில் தங்குமிட வசதிகளும் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேநேரம் மாநாடு பற்றிய கூடுதல் விளக்கங்களை www.GlobalTamilConference.org என்னும் இணைய தளத்தில் பார்வையிட முடியும் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










