இணையத்தளம் ஊடாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் பெண் ஒருவர் உட்பட 37 சீனப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படைப்பிரிவு மற்றும் தலங்கம பொலிஸாரின் ஊழல் ஒழிப்புப் பிரிவு என்பன இணைந்து முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலங்கம, கொஸ்வத்தை பகுதியில் வாடகைக்கு எடுக்கப்பட்ட வீடொன்றைச் சோதனையிட்ட போது அங்கிருந்து 35 டெக்ஸ்டொப் கணினிகள், 37 டெப் கணினிகள், 147 கைபேசிகள், 100 சிம் அட்டைகள் மற்றும் 2,100 சட்டவிரோத சிகரெட்டுகள் என்பன கண்டெடுக்கப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த அனைத்து உபகரணங்களுடன் அந்த வீடு பொலிஸாரால் சீல் வைக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மூன்று மாத கால சுற்றுலா விசா மூலம் இலங்கைக்கு வருகை தந்து, இவ்வாறான சட்டவிரோதச் சேவைகளை வழங்கியுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சந்தேகநபர்கள் இணையத்தளம் ஊடாக சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டனரா, அல்லது ஹேக்கர்களாக செயற்பட்டார்களா அல்லது வேறு ஏதேனும் இணையதளக் குற்றங்களில் ஈடுபட்டனரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், மேலதிக விசாரணைகளுக்காக குறித்த கணினிகள் மற்றும் கைபேசிகள் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட 37 சீனப் பிரஜைகளும் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலங்கம பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, அவர்கள் கடுவலை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர்.










