வவுனியா நெடுங்கேணி பிரதேச வைத்தியசாலைக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் ப.சத்தியலிங்கம் அவர்கள் இன்று ஏப்ரல் 04 ஆம் திகதி களவிஜயம் ஒன்றினை மேற்கொண்டிருந்தார். வைத்தியசாலை சமூகத்தின் கோரிக்கையின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றிருந்தது.
இதன்போது வைத்தியசாலையின் உடனடி தேவைப்பாடுகள், முக்கிய பிரச்சினைகள் தொடர்பில் வைத்தியசாலை பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலை சமூகத்தினருடன் கலந்துரையாடி கேட்டறிந்துகொண்டார். குறிப்பாக மழை காலங்களில் வைத்தியசாலை வளாகத்தில் வெள்ளநீர் தேங்குதல் மற்றும் உரிய வடிகாலமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாமை தொடர்பில் இதன்போது முன்னிலைப்படுத்தப்பட்டது. மேலும் வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படவேண்டிய அவசர திருத்தவேலைகள் தொடர்பிலும் இதன்போது பாராளுமன்ற உறுப்பினருக்கு தெரியப்படுத்தப்பட்டது.
குறித்த விடயங்களில் உடனடியாக தீர்க்கப்படவேண்டிய விடயங்கள் தொடர்பில் தொலைபேசியூடாக உரிய தரப்பினரை தொடர்புகொண்டு கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பினர், ஏனைய விடயங்கள் தொடர்பில் அமைச்சுமட்ட கவனத்திற்கு கொண்டுசென்று தீர்வினை பெற்றுதருவதாக குறிப்பிட்டிருந்தார்.
இவ்விஜயத்தின்போது வவுனியா வடக்கு பிரதேசசபை தவிசாளர் தி.கிருஸ்ணவேணி, பிரதேசசபை உறுப்பினர்களான செ.சுசீலன், பொ.தேவராசா, க.சரோஜாதேவி ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.










