நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16) இடம்பெற்ற விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பிலியந்தலை பகுதியில் நேற்று மாலை பாரவூர்தி ஒன்று வீதியை கடக்க முற்பட்ட ஒருவர் மீது மோதி விபத்துக்குள்ளானதில் பெண் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் பிலியந்தலை பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய பெண் ஒருவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், பிலியந்தலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அத்துருகிரிய பகுதியில் நேற்று மாலை அதிவேக நெடுஞ்சாலை மேம்பால வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று, எதிரே வந்த உந்துருளியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் உந்துருளியில் பயணித்த இருவர் காயமடைந்து ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதன்போது, உந்துருளியில் பயணித்த அத்துருகிரிய பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அத்துருகிரிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
அலவத்துகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அக்குரணை – நீருல்ல வீதியில் பயணித்த பாரவூர்தி ஒன்று, பின்னோக்கி நகர்ந்து பின்னால் வந்த வேன், முச்சக்கரவண்டி மற்றும் இரு பாரவூர்திகளுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் காயமடைந்த முச்சக்கரவண்டியின் சாரதி கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அலவத்துகொட பகுதியைச் சேர்ந்த 61 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த விபத்துடன் தொடர்புடைய பாரவூர்தியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அலவத்துகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.










