போரால் பதற்றம் நிலவி வரும் ஹார்முஸ் நீரிணை வழியாக இந்தியக் கொடியுடன் பயணித்த இரண்டு எரிவாயு கப்பல்களை ஈரான் அனுமதித்தது, இந்தியா–ஈரான் நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் பலன்களை அளித்துள்ளதை வெளிப்படுத்துகிறது என இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் நிலவி வரும் மோதல்களின் காரணமாக உலகளாவிய எண்ணெய் விநியோகத்தின் சுமார் 20 சதவீதம் நடைபெறும் முக்கிய கடல்வழியான ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியுள்ள நிலையில், ஜெய்சங்கரின் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது.
கடந்த சனிக்கிழமை (15) சுமார் 92,712 மெட்ரிக் டன் திரவப்படுத்தப்பட்ட பெட்ரோலிய வாயுவை ஏற்றிச் சென்ற “சிவாலிக்” மற்றும் “நந்தா தேவி” எனும் இரண்டு இந்திய எரிவாயு கப்பல்கள் இந்தியாவை நோக்கிப் பயணிக்கும் போது ஹார்முஸ் நீரிணையை பாதுகாப்பாக கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ‘தி பைனான்ஷியல் டைம்ஸ்’ நாளிதழுக்கு ஞாயிற்றுக்கிழமை அளித்த பேட்டியில் இந்திய வெளிவிவகார அமைச்சர், இந்த கப்பல்களின் பாதுகாப்பான பயணம் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளின் முக்கியத்துவத்தையும் அதன் பலன்களையும் வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார்.
ஈரான் ஹார்முஸ் நீரிணையை மூடியதிலிருந்து, ஜெய்சங்கர் தனது ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சியுடன் நான்கு முறை தொலைபேசியில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரசீக வளைகுடாவையும் அரேபியக் கடலையும் இணைக்கும் ஒரே கடல்வழிப் பாதையாகக் கருதப்படும் ஹார்முஸ் நீரிணை, உலகளாவிய எண்ணெய் நுகர்வில் தினசரி சுமார் ஐந்தில் ஒரு பங்கு எண்ணெய் போக்குவரத்து நடைபெறும் முக்கிய பாதையாகும்.










