கன்னியாகுமரி மாவட்டம் பெருமாள்புரத்தில் அமைந்துள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில், அனைத்து அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.7.85 கோடி செலவில் கட்டப்பட்ட 90 புதிய குடியிருப்புகள், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் திறந்து வைக்கப்பட்டன. முகாம்வாழ் தமிழர்களே இக்குடியிருப்புகளை திறந்து வைத்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் அகஸ்தீஸ்வரம் வட்டத்தில் பெருமாள்புரம் மற்றும் பழவிளை, விளவங்கோடு வட்டத்தில் கோழிவிளை மற்றும் ஞாரான்விளை ஆகிய இடங்களில் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்கள் செயல்பட்டு வருகின்றன. இம்முகாம்களில் சுமார் 1,200 பேர் வசித்து வருகின்றனர்.
தமிழ்நாடு அரசு, முகாம்வாழ் மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த மாதாந்திர நிதியுதவி, இலவச அரிசி மற்றும் ரேஷன் பொருட்கள், இலவச மின்சாரம், ஆண்டுதோறும் உடை மற்றும் பாத்திரங்கள் வழங்கி வருகிறது. மேலும், தையல், ஓவியம் உள்ளிட்ட திறன்மிகு பயிற்சிகள் இலவசமாக வழங்கப்பட்டு, தகுதியானவர்களுக்கு மானியக் கடனுதவிகளும் வழங்கப்படுகின்றன.
முன்னதாக பெருமாள்புரத்தில் ரூ.6.77 கோடி செலவில் 100 வீடுகளும், பழவிளையில் ரூ.4.66 கோடி செலவில் 72 வீடுகளும் திறந்து வைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.இந்நிகழ்வின்போது முகாம்வாழ் தமிழர்கள், புதிய வீடுகள் தரமானதாக அமைக்கப்பட்டுள்ளதற்கும், அரசு வழங்கி வரும் நலத்திட்ட உதவிகளுக்கும் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்.
மேலும், நியாயவிலைக் கடை மற்றும் சமுதாய நலக் கூடம் அமைத்து தருமாறு கோரிக்கை விடுத்தனர். அதனை உடனடியாக பரிசீலித்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார்.நிகழ்வில் சட்டமன்றப் பேரவைத் தலைவர் மு. அப்பாவு, பால்வளத் துறை அமைச்சர் த. மனோதங்கராஜ், மாவட்ட ஆட்சியர் ஆர். அழகுமீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.










