மீனவர்களின் கருத்துக்களை உள்வாங்காது கெங்காதேவி துறைமுகத்தை, அதிகாரிகள் தன்னிச்சையாக அபிவிருத்தி செய்து வருவதால் எந்தவிதமான பிரயோசனமும் இல்லை என சுழிபுரம் கெங்காதேவி கடற்றொழிலாளர் சங்க மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
கடற்றொழில் அமைச்சின் மூலம் எமது கடற்றொழில் சங்கத்துக்கு 10 இலட்சம் மற்றும் 8 இலட்சம் ரூபா ஒதுக்கப்பட்டது. இரண்டு நிதியையும் பயன்படுத்தி எமது துறைமுகத்தை புனரமைப்பதற்கு திட்டமிட்டிருந்தோம். ஆனால் இரண்டு நிதியும் ஒரு திட்டத்திற்கு வழங்க முடியாது என்று கூறி 10 இலட்சம் ரூபாவினை எமக்கு வழங்காது திருப்பி அனுப்பிவிட்டனர். எட்டு இலட்சம் மட்டுமே எமக்கு வழங்கப்பட்டது.
எட்டு இலட்சம் ரூபாவிற்கான வேலைத்திட்டத்திற்கான வரைபை நாங்கள் அதிகாரிகளிடம் சமர்ப்பித்தோம். இருப்பினும் அவர்கள் எமது திட்டத்தை புறந்தள்ளிவிட்டு தமது எண்ணத்திற்கு ஏற்றாற்போல் அபிவிருத்தி பணிகளில் ஈடுபடுகின்றனர்.
அவர்கள் செய்கின்ற அபிவிருத்தியால் எமக்கு எந்தவிதமான பிரயோசனமும் இல்லை. கிடைத்த 8 இலட்சம் ரூபா நிதியினை அநியாயம் செய்கின்றனர். படகுகளை நிறுத்தி வைக்கும் பகுதிக்குள் அதிக மண் உள்ளதால் அந்த பகுதி உயரமாக காணப்படுன்றது. இதனால் அந்த பகுதிக்குள் தண்ணி இல்லாத காரணத்தால் படகுகளை துறைமுகத்தின் உள்ளே கொண்டுவந்து நிறுத்தி வைக்க முடியாத சூழ்நிலை காணப்படுகிறது.
ஆகையால் நாங்கள், இரண்டு புறமும் உள்ள தடுப்புகளை நீக்குமாறு எமது வேலைத்திட்டத்தை முன்வைத்தோம். இரண்டு பகுதிகளிலும் உள்ள தடுப்புகளை நீக்கினால் மண் வெளியே செல்லும். இதன்போது படகுகளை துறைமுகத்துக்குள் கொண்டுவரக்கூடிய நிலை ஏற்படும்.
ஆனால் அவர்கள் அதனை செய்யாமல் வெறுமனே ஆழப்படுத்தலில் ஈடுபடுகின்றார்கள். நாங்கள் பல தடவைகள் கூறியும் எமது கருத்துக்களுக்கு செவி சாய்க்கவில்லை. 121 மணித்தியாலங்கள் ஜேசிபி இயந்திரத்தை பயன்படுத்தி ஆழப்படுத்துவதே அவர்களது வேலைத்திட்டம் என்று கூறுகின்றனர். அவர்கள் இவ்வாறு ஆழப்படுத்தினாலும் மீண்டும் அந்த இடம் மூடுப்படும்.
இது குறித்து யாழ். மாவட்ட கரையோர பாதுகாப்பு திணைக்களத்தின் பொறியியலாளர் கெங்காதரன் தர்சனுக்கு தெரியப்படுத்தினோம். ஆனால் அவர் எமது கருத்துக்களை செவிமடுக்கவில்லை. நாங்கள் தொடர்ந்து அழுத்தம் கொடுத்த காரணத்தால் அதற்கு பழிவாங்கும் முகமாக ஆழப்படுத்தும் பகுதியில் 5 மீற்றர் எல்லையை குறைத்து ஆழப்படுத்துமாறு, வேலைத்திட்டத்தை செய்பவர்களிடம் கூறியுள்ளார்.
அத்துடன் எமது கடற்பகுதியில் சுற்றுலா மையம் அமைப்பதற்கு அனுமதி கேட்டனர். சுற்றுலா மையம் அமைத்தால் எமது கடற்றொழில் நடவடிக்கைகள் பாதிக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் எமக்கு பல தடவைகள் அழைப்பு மேற்கொண்டு அனுமதி வழங்குமாறு கோரினர். நாங்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் அதற்கும் சேர்த்து பழிவாங்குவது போல் உள்ளது.
எனவே உரிய அதிகாரிகள் விரைவில் இதனை கருத்தில் எடுத்து எமக்கு உகந்த வேலைத்திட்டத்தை, எமது வரைபடத்தின்படி செய்துதர வேண்டும் என்றனர்.



