முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு கல்வி வலயத்திற்கு உட்பட்ட அளம்பில் றோமன் கத்தோலிக்க மகாவித்தியாலய மாணவர்களின் 2025 ஆம் ஆண்டு இல்ல மெய்வன்மை திறனாய்வு போட்டியினை முன்னிட்டு மாணவர்களுக்கிடையிலான மரதனோட்டப் போட்டி இன்று (03.02.2025) காலை சிறப்பாக இடம்பெற்றது.
ஆண்களுக்கான மரதனோட்டப் போட்டி முல்லைத்தீவு சிலாவத்தை சந்தியில் இருந்து அளம்பில் றோ.க மகா வித்தியாலயம் வரையும், பெண்களுக்கான மரதனோட்ட போட்டி நான்காம்கட்டைப் பகுதியில் இருந்து அளம்பில் றோ.க மகாவித்தியாலயம் வரையும் இடம்பெற்ற மரதனோட்ட போட்டியில் பாடசாலையின் மாணவ, மாணவிகள் பலரும் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர்.
ஆண்கள் பிரிவிலும், பெண்கள் பிரிவிலும் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களையும் பெற்ற வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களும், பதக்கமும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டுள்ளதுடன் முதல் 10 இடங்களை பெற்ற வீரர்கள் பதக்கங்களும் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
குறித்த மரதன் ஓட்ட போட்டிக்கான பிரதான அனுசரணையினை கனடாவில் வசிக்கும் கந்தசாமி பத்மநாதன் அவர்களும் பகுதி அனுசரணையாளர்களாக பிரதி அதிபர் ஏ.ஜீவரட்ணம், பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்களும் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.