நாவிதன்வெளி பிரதேசத்தின் நீண்டகால வீதிப் பிரச்சினை மற்றும் பேருந்து நிலையப் பற்றாக்குறை ஆகியவற்றுக்கு இவ்வருட இறுதிக்குள் தீர்வு காண அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டம் குழுவின் தலைவர் திருமதி முத்து மணிக்கே தலைமையில் செவ்வாய்க்கிழமை(30) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளர் இந்திரன் ரூபசாந்தன் நாவிதன்வெளி பிரதேச மக்கள் நீண்டகாலமாக எதிர்நோக்கி வரும் இரு முக்கிய குறைபாடுகளை அபிவிருத்தி குழுவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்.
நாவிதன்வெளி பிரதேசத்தில் நீண்டகாலமாக செப்பனிடப்படாமல் கைவிடப்பட்ட நிலையில் காணப்படும் ‘பழைய உஹன வீதி’ குறித்து தவிசாளர் இங்கு விரிவாக எடுத்துரைத்தார். இவ்வீதியை உடனடியாகப் புனரமைத்து மக்கள் பாவனைக்குக் கையளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தினார்.
இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அபிவிருத்திக் குழு, வீதியை புனரமைப்பதற்கான அங்கீகாரத்தை வழங்கியதுடன், பணிகளை வீதி அபிவிருத்தி அதிகார சபையிடம் (RDA) ஒப்படைத்தது. மேலும், இவ்வருட இறுதிக்குள் இதற்கான ஆரம்பக்கட்ட வேலைகள் ஆரம்பிக்கப்பட வேண்டும் எனவும் கூட்டத்தில் தீர்மானம் எட்டப்பட்டது.
தொடர்ந்து நாவிதன்வெளி பிரதேச சபை எல்லைக்குட்பட்ட மத்திய முகாம் பகுதியில் முறையான, நிலையான பேருந்து நிலையம் ஒன்று இல்லாததால் பொதுமக்கள் அன்றாடம் பெரும் அசௌகரியங்களைச் சந்தித்து வருவதை தவிசாளர் சுட்டிக்காட்டினார். அதனை தொடர்ந்து இதற்கான தீர்வை வழங்க வேண்டுமென அபிவிருத்திக் குழுவில் தீர்மானம் எட்டப்பட்டது.
நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளரினால் மக்கள் நலன் கருதி முன்வைக்கப்பட்ட இந்த இரு முக்கிய முன்மொழிவுகளும் அபிவிருத்தி குழுவினால் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அடுத்தகட்ட பணிகளுக்காகப் பரிந்துரைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.














