இலங்கை அரசியல் வரலாற்றில் சொன்னதைச் செய்த, செய்ததைச் சொன்ன ஒரே ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ மட்டுமே என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் 102 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற விசேட நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,
“முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ ஒவ்வொரு வருடமும் ஜூன், ஜூலை மாதங்களில் ‘கம் உதாவ’ கிராம எழுச்சித் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்தார். ஒருங்கிணைந்த வீட்டுத்தொகுதி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மக்களுக்கு வீடு பெற்றுக் கொடுத்தது மாத்திரமன்றி, குடும்ப அலகை மையப்படுத்திய வருமான உற்பத்தி நலன்புரித் திட்டங்களையும் அவர் அறிமுகப்படுத்தினார். 1977 ஆம் ஆண்டு தேர்தல் மேடையில் வாக்குறுதி அளித்தபடி முதற்கட்டமாக ஒரு இலட்சம் வீட்டுத் திட்டத்தை நிறைவு செய்ததுடன், அதன் தொடர்ச்சியாக பத்து இலட்சம் மற்றும் பதினைந்து இலட்சம் பங்கேற்பு வீடமைப்பு அபிவிருத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்தார்.
மக்களின் கவனத்தை வேறு பக்கம் திசைதிருப்பாமல் நாட்டுக்கு உண்மையான சேவையைச் செய்ய வேண்டுமானால், சொல்வதைச் செய்யவும், செய்வதைச் சொல்லவும் கூடிய பண்பு வேண்டும். அந்தத் தலைசிறந்த பண்பு ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவிடம் காணப்பட்டது.
நமது நாட்டு இலவசக் கல்வி முறையில் விஐபி மற்றும் விஐபி அல்லாத பாடசாலைகள் என ஒரு பாரிய பிரிவினையும் ஏற்றத்தாழ்வும் காணப்படுகின்றது. இந்தத் தவறான கல்வி முறைமையை ஒழிப்பதற்காகவே நாம் ‘பிரபஞ்சம்’ திட்டத்தை முன்னெடுத்தோம்.
ஆரம்பத்தில் நாம் ஆங்கில மொழி மூலக் கல்வி பற்றிப் பேசியபோது எங்களைக் கேலி செய்தவர்களால், பொது வெளியில் இன்று சில ஆங்கில வார்த்தைகளைக் கூட சரியாக உச்சரிக்க முடியாமல் தடுமாறுவதைக் காண்கின்றோம். குறையை அடையாளம் கண்டு அதைத் திருத்திக்கொள்ள விரும்பாமை நாட்டின் ஒரு சோகமான நிலைமையாகும்.
சர்வதேச வேலைவாய்ப்புச் சந்தையில் ஆங்கிலக் கல்வி கற்றவர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகின்றது. ஆங்கிலக் கல்வியின் முக்கியத்துவத்தை ரணசிங்க பிரேமதாஸ அவர்கள் அன்றே அறிந்திருந்தார். இன்று டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி பற்றிப் பேசினாலும், கிராமத்துப் பாடசாலைகளுக்கு இதன் பலன்கள் கிடைப்பதில்லை. புதிய தொழில்நுட்பத்துக்குப் பொருத்தமான தொழில்களை நோக்கி நமது நாட்டை நகர்த்த எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இவற்றை நாம் சுட்டிக்காட்டும் போது அரசின் ஆதரவாளர்களால் சமூக ஊடகங்களில் அவை நகைப்புக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன.
துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் விலைக்கு எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்றும், மின்சாரக் கட்டணத்தை 33 சதவீதத்தால் குறைப்போம் என்றும் தற்போதைய அரசு பிரஸ்தாபித்தாலும், இன்று வரை அவற்றில் எந்த முன்னேற்றமும் இல்லை.
தற்போது நாட்டின் பிரதான பொருளாதாரத் தூணாக விளங்கும் ஆடைத் தொழிற்சாலைகள் நட்டம் காரணமாகத் தொடர்ச்சியாக மூடப்பட்டு வருகின்றன. இவ்வாறானதொரு இக்கட்டான சூழ்நிலையில், இருக்கின்ற தொழிற்சாலைகளைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, வாழைத்தண்டில் இருந்து ஆடைகளைத் தயாரிக்கும் புதிய தொழிற்சாலைகளை உருவாக்குவோம் என்று இந்த அரசின் பிரதி அமைச்சர் ஒருவர் கூறித் திரிகினறார். விந்தையான இக்கதைகளை விடுத்து, நாட்டில் ஏற்கனவே அமைந்து காணப்படும் பாரம்பரிய ஆடைத் தொழிற்சாலைகளைப் பாதுகாப்பது தற்போதைய அரசின் உடனடிக் கடமையாகும்.” – என்றார்.

















