பொய்களைக் கூறி ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசு நாட்டின் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களை முற்றிலும் ஏமாற்றிவிட்டது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடன் நேற்று எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் கூறியதாவது,
“நமது நாட்டின் 15 ஆயிரம் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக நாம் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவோம். இலவசக் கல்வியின் ஊடாகப் பட்டத்தைப் பெற்ற இவர்கள், தங்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காகச் சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படுவதற்கு முன்னரே பணியில் அமர்த்தப்பட்டனர்.
இருப்பினும், இதுவரை அவர்களுக்கான சேவைப் பிரமாணக் குறிப்பு உருவாக்கப்படவில்லை. அரச சேவையில் ஈடுபட்டுள்ள இவர்களுக்கு முறையான ஆட்சேர்ப்புப் பரீட்சை, சமமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் கூட இதுவரையில் உருவாக்கப்படவில்லை.
பட்டத்துக்கு ஏற்ற பதவிகள் இல்லாமை மற்றும் பட்டதாரிகளை விடக் குறைந்த தகைமைகளைக் கொண்டவர்கள் இவர்களைக் கண்காணிக்கும் அவல நிலை காணப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இவர்களின் பெயர் ‘சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்’ என மாற்றப்பட்டு ஏமாற்றப்பட்டனர். இந்த அநீதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடும் என்பதுடன், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இது குறித்து அவதானத்தைத் திருப்புவேன்.
சிரேஷ்ட பிரஜைகள் மற்றும் ஓய்வூதியர்களின் 10 இலட்சம் மற்றும் 15 இலட்சம் ரூபா வரையான சேமிப்புகளுக்கு கடந்த காலத்தில் வழங்கப்பட்ட 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகளின் விதை மற்றும் உரங்களுக்கான மானிய விலை மற்றும் உத்தரவாத விலைகள் இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் ஒவ்வொரு விவசாயியும் கடுமையான நிர்க்கதிக்குள்ளாகியுள்ளனர்.
மீனவர்களுக்கு வழங்குவதாகக் கூறப்பட்ட வளங்களும் சலுகைகளும் தற்போதைய அரசால் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளன.
பொருட்களின் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ள இத்தருணத்தில், ஏப்ரல் மாதத்தில் 30 நாட்கள் வாழ்வதற்கு 17 ஆயிரம் ரூபாய் போதுமானது என அரசு கூறி வருகின்றது. 30 நாட்கள் வாழ்வதற்கு இந்தத் தொகை போதுமானதா என்று மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமக்குச் சாதகமான மக்கள் கருத்தை உருவாக்குவதற்காக, அரசு சூசகமாகச் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி காய்நகர்த்தி வருகின்றது. இதனால் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் மந்தபோசணமும் வறுமையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.
துறைமுகத்தில் தரையிறக்கப்படும் இறக்குமதி விலைக்கு ஏற்ப எரிபொருட்களைப் பெற்றுத் தருவோம் என்றார்கள். ஊழல், மோசடிகளை ஒழிப்போம் என்றார்கள். மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறினார்கள். ஆனால், இன்று அது எதுவும் நடந்தபாடில்லை. அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தலா 10 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனப் பிரஸ்தாபித்த போதிலும், பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் காத்துக்கொண்டே இருக்கின்றனர்.
பொய்களைக் கூறி ஜனாதிபதி பதவியையும் மூன்றில் இரண்டு பெரும்பான்மையையும் பெற முடிந்தாலும், இந்தப் பொய்களுக்கு நீண்ட ஆயுள் இல்லை. நான் உண்மையைப் பேசிவிட்டு வீட்டுக்குச் சென்றேன். ஆனால் பொய் சொன்னவர்கள் ஆட்சிக்கு வந்து 220 இலட்சம் மக்களையும் ஏமாற்றிவிட்டனர். இப்போது நாட்டுக்குச் சரியான மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தி மட்டுமே என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர்.” – என்றார்.










