மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திற்குட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலய அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யக்கோரியும் ஆசிரியர் பற்றாக்குறையினை நிவர்த்தி செய்யக்கோரியும் பாடசாலை மாணவர்களாலும் பெற்றோர்களாலும் பாடசாலை மூடப்பட்டு ஆர்ப்பாட்டம் செய்யப்பட்டது.
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்துக்கு உட்பட்ட ஏறாவூர் அல் அஷ்ரப் வித்தியாலயத்தின் அதிபரின் இடமாற்றத்தை நிறுத்தக் கூறி பாடசாலை கதவினை மூடி பெற்றோர் மற்றும் மாணவர்களும் சேர்ந்து பாடசாலை முன்பாகவே ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்.
நேற்று காலை பாடசாலையின் முன் வாயிலை மூடி மாணவர்கள் பாடசாலைக்குள் செல்லாமல் அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்ய கூறி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதில் பெற்றோர்கள் மாணவர்கள் மற்றும் பாடசாலை சமூகம் கலந்து கொண்டதில் குறித்த அதிபர் சிறந்த முறையில் செயற்பட்டு வரும் போது அதிபர் இடமாற்றத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என தெரிவித்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாறு மாணவர்கள் பல்வேறு கோசங்களை இட்டனர்.
ஆசிரியர்களை பாடசாலைக்கு பெற்றுத்தருமாறு பெற்றோர்கள் கல்வி திணைக்களத்திற்கு தெரிவித்த போது எந்தவித நடவடிக்கைளும் எடுக்கவில்லை ஆனால் அதிபர் மீது குற்றச்சாட்டு வந்தபோது விசாரணை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்.
பாடசாலை நல்ல நிலைமைக்கு திரும்பியுள்ளதே இந்த அதிபரினாலேதான் ஆகவே அதிபரின் இடமாற்றத்தை இரத்து செய்யும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்புவதில்லை என மாணவர்களின் பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் நுழைவாயிலை மூடி ஆர்ப்பாட்டம் செய்ததனால் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளே செல்லவில்லை. இதனால் பாடசாலை நடாத்த முடியாத நிலை ஏற்பட்டது.
ஆர்பாட்ட இடத்திற்கு ஏறாவூர் பொலிசார் வருகை தந்திருந்ததுடன், வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எம்.ஜவாத், பிரதிக் கல்விப்பணிப்பாளர்கள், உதவிக் கல்விப்பணிப்பாளர்கள் மற்றும் கோட்டக்கல்வி அதிகாரி ஏ.எல்.அபுள்ஹஸன் ஆகியோரும் வருகை தந்து ஆர்ப்பாட்டக்காரர்களுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இப்பாடசாலை மிக நீண்டகாலமாக தகுதியான அதிபர் மற்றும் ஆசிரியர்கள் இன்றி புறக்கணிக்கப்படுவதனால் கல்வித்தரத்தில் பின்தங்கிக் காணப்படுவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் முறையிட்டனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு வருடகாலமாக அதிபராகக் கடமையாற்றி வருபவர் திடீர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளமை கவலையளிப்பதாக மக்களால் தெரிவிக்கப்பட்டது. எனவே இந்த இடமாற்றம் இரத்துச் செய்யப்படும் வரை தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்ப மாட்டோம் எனக்கூறி பெற்றார்கள் வீதியில் நின்ற பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் சென்றனர்.
அப்பாடசாலையில் தற்போது பதில் அதிபர் பொறுப்பிலுள்ளவருக்கெதிராக அலுவலகமட்ட விசாரணை நடைபெற்று வருவதனால் விசாரணை முடியும்வரை அவர் தற்காலிகமாக வேறு பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளதாகவும் விரைவாக சுமுகமான தீர்வு காணப்படுமென்றும் வலயக் கல்விப்பணிப்பாளர் உறுதியளித்தார்.
இதையடுத்து பொலிஸாரின் ஒத்துழைப்புடன் பாடசாலை வாயில் திறக்கப்பட்டு ஆசிரியர் ஒப்பமிட்டனர்.














