தற்போதைய அரசின் கீழ் மலையக மக்களின் வாழ்க்கை முற்றாகப் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கடுமையாகச் சாடியுள்ளார்.
அவர்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் தேர்தல் விளம்பரங்களாகவே சுருங்கிவிட்டன என்றும் அவர் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற மலையக சமூகம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் மேலும் உரையாற்றுகையில்,
“தேர்தல் காலத்தில் மலையக மக்களுக்காகத் தனிப்பட்ட அறிவிப்புகளை வெளியிட்ட தற்போதைய அரசு, இன்று அவர்களைப் பாதுகாப்பற்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளது.
நீலகாமம் தோட்டத்தில் அண்மையில் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் சம்பவத்தைப் பார்க்கும்போது, இந்த அரசின் கீழ் மலையக மக்களுக்குப் பாதுகாப்பு இருக்கின்றதா என்ற பலத்த கேள்வி எழுகின்றது.
மிகச் சாதாரண உரிமையான தாக்குதல்களுக்கு உள்ளாகாமல் சுதந்திரமாக வாழ்வதற்கான சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதில் இந்த அரசு முற்றாகத் தோல்வியடைந்துள்ளது.
அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் மலையகப் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, மக்கள் வீடுகளை இழந்து இடைத்தங்கல் முகாம்களில் சொல்லொணாத் துயரங்களை அனுபவித்தனர்.
மஸ்கெலியா தோட்டத்தில் மட்டும் சுமார் 40 குடும்பங்களின் வீடுகள் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படுவதாகக் கூறப்பட்ட 50 இலட்சம் மற்றும் 100 இலட்சம் ரூபா நிவாரண நிதிகள் இதுவரை மக்களுக்குச் சென்றடையவில்லை.
2026 மார்ச் மாதம் ஜனாதிபதி இது குறித்து ஒருங்கிணைந்த அறிக்கையொன்றை வெளியிட்ட போதிலும், அடிமட்டத்தில் இன்னும் 50 இலட்சம் ரூபா நிவாரணம்கூடப் பாதிக்கப்பட்ட மக்களுக்குக் கிடைக்கவில்லை.
அத்துடன், சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளைக்கூடப் புனரமைக்க அரசு தவறிவிட்டது.
அரசின் மீதான அதிருப்தி காரணமாகவே, கடந்த 2026 ஜனவரி 15 ஆம் திகதியன்று மலையக மக்கள் “உரிமைகளுக்கான பொங்கல்” என்ற முழக்கத்துடன் வீதிகளில் இறங்கிப் போராடினார்கள்.
லயன் அறைகளுக்குப் பதிலாக, தமக்குச் சொந்தக் காணியில் வீட்டுரிமை வேண்டும் என்பதே அவர்களின் பிரதான கோரிக்கையாக இருந்தது.
தேசிய தேயிலை உற்பத்தியில் 40 வீத பங்களிப்பை வழங்கும் சிறிய தேயிலைத் தோட்ட உரிமையாளர்களே அதிக உற்பத்தியைத் தருகின்றனர்.
ஆனால், பெருமளவிலான தேயிலைக் காணிகளைத் தம்வசம் வைத்துள்ள பெரிய நிறுவனங்கள் மிகக் குறைந்த பங்களிப்பையே வழங்குகின்றன.
எனவே, இந்த நிறுவனங்களின் வசம் பயிரிடப்படாமல் கைவிடப்பட்டுள்ள பெருமளவிலான காணிகளை மீளக் கையகப்படுத்தி, அவற்றை மலையகச் சமூகத்தினருக்குப் பிரித்துக் கொடுக்க வேண்டும்.
மலையகப் பகுதிகளில் கல்வி மற்றும் சுகாதாரத் துறைகள் மிக மோசமான பின்னடைவைச் சந்தித்துள்ளன.
மலையகக் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணித் தாய்மார்கள் மத்தியில் நிலவும் கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் போக்க அரசு உடனடியாகத் தலையிட வேண்டும்.
முறையான சமூக நலன்புரி திட்டங்கள் ஊடாக இந்த மக்களின் வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி, அவர்களின் சமூக அந்தஸ்தை உயர்த்த வேண்டும்.
நாட்டுக்குப் பில்லியன் கணக்கான டொலர்களைத் தேடித்தரும் இந்த உழைப்பாளர் சமூகத்துக்காக, வெறும் வெற்று அறிக்கைகளை மட்டும் வெளியிடாமல், இதயசுத்தியுடன் அரசு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்றும் சஜித் பிரேமதாஸ சபையில் தெரிவித்தார்.










