இலங்கை பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடருக்காக 650க்கும் மேற்பட்ட வெளிநாட்டு வீரர்கள் பதிவு செய்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு நடைபெறவுள்ள தொடருக்காக ஐசிசி (ICC) முழு அங்கத்துவம் பெற்ற அனைத்து நாடுகளின் வீரர்களும், அத்துடன் சில அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி, உலகெங்கிலும் உள்ள 21 நாடுகளில் இருந்து வீரர்கள் இம்முறை பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்தவர்களில் அதிகபட்சமாக பாகிஸ்தானில் இருந்து 102 வீரர்கள் உள்ளனர்.
மேலதிகமாக மேற்கிந்திய தீவுகள் (75), தென்னாப்பிரிக்கா (66), பங்களாதேஷ் (48), நியூசிலாந்து (41), அவுஸ்திரேலியா (24), இங்கிலாந்து (15) மற்றும் இந்தியா (12) ஆகிய நாடுகளில் இருந்தும் வீரர்கள் பதிவு செய்துள்ளதாக கிரிக்கெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்கா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய அசோசியேட் நாடுகளின் வீரர்களும் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்துள்ள மொத்த வீரர்களில் 310 பேர் விசேட மதிப்பீட்டு செயல்முறைக்குப் பின்னர் இறுதிச் சுற்றுக்குத் தெரிவு செய்யப்படவுள்ளனர்.
இதற்கமைய, அந்த வீரர்கள் ஜூன் மாதம் 1ஆம் திகதி நடைபெறவுள்ள LPL உத்தியோகபூர்வ பிளேயர் டிராப்ட் நிகழ்வில் உள்ளடக்கப்படுவர்.
6ஆவது முறையாக நடைபெறவுள்ள LPL கிரிக்கெட் தொடர், எதிர்வரும் ஜூலை 17ஆம் திகதி முதல் ஓகஸ்ட் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.










