அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி சட்டவிரோதமாகக் காணிகளைக் கைப்பற்றுவதற்கு இனிமேலும் இடமளிக்க முடியாது என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கிழக்கு மாகாணத்தின் காணிகளைப் பாதுகாப்பதற்காக பிரதிப் பொலிஸ்மா அதிபரின் தலைமையில் விசேட குழுவொன்று உடனடியாக நியமிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற மாவட்ட விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.
அரசியல் பின்னணியுடன் கிழக்கு மாகாணத்தில் அரங்கேறும் காணி ஆக்கிரமிப்புகளால் பல்வேறு சமூகப் பிரச்சினைகள் எழுந்துள்ளதைச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி,
அவற்றை முறியடிக்க விசேட பொலிஸ் குழுவை நியமிக்க உத்தரவிட்டார்.
மாகாணத்தில் இடம்பெறும் சட்டவிரோத காணி நிரப்பல்களைப் பாதுகாப்புப் பிரிவினர் உடனடியாகத் தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் அவர் பணிப்புரை விடுத்தார்.
“மகாவலி அதிகார சபையால் கடந்த 5 வருடங்களுக்கு முன்னர் வர்த்தகத் திட்டங்களுக்காக வழங்கப்பட்டு, இதுவரை அபிவிருத்தி செய்யப்படாமல் முடக்கப்பட்டுள்ள காணிகள் மீண்டும் அரசால் கையகப்படுத்தப்படும்.
அவை மாவட்ட அல்லது பிரதேச செயலாளர்களின் கீழ் கொண்டுவரப்பட்டு, முறையான திட்டங்களின் கீழ் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும்.” – என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“வலயக் கல்வி அலுவலகங்கள் மற்றும் பிரதேச செயலகங்கள் போன்ற நிர்வாகக் கட்டமைப்புகளை நிறுவுவது அரசியல் ரீதியான பணியல்ல, அது ஒரு தூய நிர்வாகப் பணியாகும்.
எனவே, நிர்வாகக் கட்டமைப்புகள் எக்காரணம் கொண்டும் இனங்களின் அடிப்படையில் அமையக் கூடாது.
அவை நிலப்பரப்பின் அளவு, மக்கள் தொகை போன்ற பொதுவான அளவுகோல்களின் அடிப்படையில் மட்டுமே அமைக்கப்பட வேண்டும்.” – என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
கடலரிப்பால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்குக் கடற்கரையைப் பாதுகாக்க ‘கடல் தடுப்புச்சுவர்’ அமைப்பது ஒரு நடைமுறைச் சாத்தியமான தீர்வு அல்ல என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒலுவில் துறைமுகம் மற்றும் மீன்பிடித் துறைமுகத்தை உள்ளடக்கி, இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண விஞ்ஞானபூர்வமான அவசர ஆய்வு ஒன்றை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறுத்தினார்.
ஒவ்வொரு வருடமும் கல்ஓயா ஆறு பெருக்கெடுப்பதால் அம்பாறை, சம்மாந்துறை, காரைதீவு, அட்டாளைச்சேனை, கல்முனை, அக்கரைப்பற்று, இறக்காமம், தமன்ன, நிந்தவூர் உள்ளிட்ட 9 பிரதேச செயலகப் பிரிவுகளின் மக்கள் எதிர்கொள்ளும் வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண அவசர ஆய்வு நடத்த உத்தரவிடப்பட்டதுடன், அதற்கான முதற்கட்ட நிதியும் ஒதுக்கப்படவுள்ளது.
அறுகம்பே மற்றும் பானம ஆகிய சுற்றுலாப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்யும் வேளையில், கடற்கரையோரம் ஹோட்டல்களை நடத்துவதில் வெவ்வேறு நபர்களுக்கு வெவ்வேறு விதமாகச் சார்பாகச் செயற்படும் அரச அதிகாரிகளின் போக்குக்கு ஜனாதிபதி கடும் கண்டனம் வெளியிட்டார்.
கல்முனைப் பகுதியில் தற்போது வெவ்வேறு இடங்களில் சிதறி அமைந்துள்ள அனைத்து அரச நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டு வருதற்கான திட்டங்களைத் தயாரிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார். இதற்கான நிதி வரவிருக்கும் வரவு – செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
லாகுகல பிரதேசத்துக்குத் குடிதண்ணீர் வழங்குவதற்காக ஹெடஓயாவை மையமாகக் கொண்டு 5 வருடங்களுக்கு முன்னர் ஆரம்பிக்கப்பட்டு முடக்கப்பட்டிருந்த குடிதண்ணீர் திட்டம் மீண்டும் உடனடியாக ஆரம்பிக்கப்படும்.
அத்துடன், நுவரகல தொல்பொருள் வன ஒதுக்கீட்டைப் பாதுகாத்தல் மற்றும் மாதுருஓயா வன ஒதுக்கீட்டை அண்மித்த ஆதிவாசிகள் கிராம (ஹேனானிகல தெற்கு) சுற்றுச்சூழல் சுற்றுலாத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.
கரும்பு விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குச் சர்க்கரை ஆலை நிறுவனங்களுடன் கலந்துரையாடி விரைவான தீர்வு எட்டப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.
அண்மையில் வீசிய ‘டித்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட அம்பாறை மாவட்ட மக்களுக்கு உயிரிழப்புகளுக்கான இழப்பீடு, பயிர்ச் சேதங்கள், கால்நடை மற்றும் மீனவச் சமூகத்துக்கான வாழ்வாதார இழப்பீடுகள் வழங்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்து ஜனாதிபதி தனித்தனியாகக் கேட்டறிந்தார்.
அனர்த்தங்களினால் பொருளாதார ரீதியாகக் கீழ் மட்டத்தில் உள்ள மக்களே அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதால், அவர்களுக்கான பகுதியளவு மற்றும் முழுமையான வீட்டுச் சேதங்களுக்கான இழப்பீடுகள் மற்றும் 16 வருடங்களாகத் தாமதிக்கப்பட்டு வரும் மீள்குடியேற்றப் பணிகளைப் போர்க்கால அடிப்படையில் விரைவுபடுத்துமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டார்.
அம்பாறை மாவட்டத்தின் அபிவிருத்தித் திட்டங்களுக்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 22 ஆயிரம் மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதை நினைவூட்டிய ஜனாதிபதி, இந்த நிதி ஒதுக்கீடுகளை உரிய நிதியாண்டுக்குள்ளேயே முறையாகப் பயன்படுத்தி மக்களுக்குப் பலன்களைப் பெற்றுக்கொடுப்பது அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என்றும் எச்சரித்தார்.













