மலையக மக்களின் காணி உரிமையை வலியுறுத்தி, சங்கு கலைக்கழகம் (SANGU SKK) மற்றும் சிட்ப்ஸ் (SIDPS) நிறுவனம் இணைந்து தயாரித்த கொள்கைப் பிரகடனம் வெளியீட்டு விழா, கடந்த 16.05.2026 சனிக்கிழமை அன்று ஹட்டன் கிருஷ்ண பவான் கலாசார மண்டபத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
மலையக மக்களின் காணி உரிமை பற்றிய விரிவான கலந்துரையாடல்
இந்நிகழ்வின் பிரதான அங்கமாக, மலையக மக்களின் 203 வருட அரசியல் வரலாற்றின் பின்னணிகள், சொந்த நாட்டிலேயே முகவரியற்றவர்களாக வாழும் மக்களின் எண்ணக் குமுறல்கள் மற்றும் எதிர்காலத்தில் உரிமைகளை எவ்வாறு தக்கவைத்துக் கொள்வது என்பது பற்றிய விரிவான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இக்கொள்கைப் பிரகடனத்தின் தயாரிப்பாளரும், பிரபல எழுத்தாளரும், சமூக ஆய்வாளருமான திரு. ஜெகன் அவர்கள், மலையக மக்களின் காணி உரிமை குறித்த வரலாற்றுப் பின்னணிகளைத் தொகுத்து ஆழமான சொற்பொழிவையும் கருத்துரையையும் வழங்கியதோடு, அது குறித்த மாபெரும் அரங்க விவாதம் ஒன்றையும் முன்னெடுத்தார்.
அதனைத் தொடர்ந்து, மலையக மக்கள் இதுவரை காலமும் எவ்வாறான அடிப்படை உரிமைகளில் இருந்து வஞ்சிக்கப்பட்டார்கள் என்பது குறித்தும், அவர்களின் காணி உரிமை சார்ந்த தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்தும் சிட்ப்ஸ் நிறுவனத்தின் தலைவர் திரு. கணேசலிங்கம் அவர்கள் விரிவானதொரு பேருரையை ஆற்றினார்.
இந்நிகழ்வின் அடுத்த முக்கிய நகர்வாக, மலையக மக்களின் 203 வருட கால வரலாற்றுத் துயரங்களை விபரிக்கும் ‘நிலமே எங்கள் நிலைக்களம்’ என்ற மேடை நாடகம் அரங்கேற்றப்பட்டது.
UNOPS மற்றும் விருத்தி நிறுவனங்களின் நிதி அனுசரணையின் கீழ், சிட்ப்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சங்கு கலைக்கழகம் இந்நாடகத்தைத் தயாரித்திருந்தது.
மண்டபம் நிறைந்திருந்த பார்வையாளர்கள் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடனும் ஆர்வத்துடனும் நாடகத்தின் ஒவ்வொரு அசைவையும், வசனத்தையும் உன்னிப்பாக அவதானித்தனர். 28 நிமிடங்கள் நீடித்த இந்த வீதி நாடக வடிவிலான மேடை ஆற்றுகை, மலையக மக்கள் அனுபவித்த துன்பங்கள், ஏமாற்றங்கள் மற்றும் அரசியல் நகர்வுகளுக்காக அவர்கள் எவ்வாறு பகடைக்காய்களாகப் பயன்படுத்தப்பட்டார்கள் என்பதைத் தெட்டத்தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது.
அரசாங்கங்களை அமைக்கும் ஒவ்வொரு தரப்பும் மக்களுக்கு வழங்கிய போலி வாக்குறுதிகளை எள்ளி நகையாடும் வகையில் அமைந்த இந்நாடகம், பார்வையாளர்களைச் சிரிக்க வைத்ததோடு மட்டுமன்றி, ஆழமாகச் சிந்திக்கவும் தூண்டியது. மலையக மக்களின் இருப்பிடத்திற்கும் வாழ்விடத்திற்கும் காணி உரிமை எவ்வளவு அவசியமானது என்பதையும், அதுவே அவர்களுக்கான தனித்துவமான அடையாளத்தை வழங்கும் என்பதையும் மக்கள் மனதில் ஆழமாக விதைத்தது.
சமூக மாற்றத்திற்கான கருவியாக சங்கு கலைக்கழகம்
கடந்த 10 வருடங்களாக சமூக மாற்றத்தை நோக்கி இயங்கி வரும் ஒரு முற்போக்கு நாடகக் குழுவாக சங்கு கலைக்கழகம் திகழ்கிறது. கலையை வெறும் பொழுதுபோக்காகப் பார்க்காமல், சமூக மாற்றத்திற்கான ஒரு வலிமையான ஆயுதமாக ஏந்தி, அவ்வப்போது குரலற்றவர்களின் குரலாக ஒலித்து வருகின்றது.
இலங்கையின் மத்திய மலைநாட்டை மட்டும் பிரதிநிதித்துவப்படுத்தாமல், இலங்கை முழுவதிலும் சர்வதேச மட்டத்திலும் பல மேடை நாடகங்களை அரங்கேற்றி, தேசிய மற்றும் சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ள ஒரு தனித்துவமான கலைக் குழுவாக இது உருவெடுத்துள்ளது. இவர்களின் அறிவியல் சார்ந்த, முற்போக்கான கலைச் செந்நெறி நம் சமூகத்தை ஒரு நேர்மறையான திசையை நோக்கி இட்டுச் செல்லும் என்பது திண்ணம்.
தொடரும் மக்கள் நோக்கிய பயணம்
‘கலைகளால் களைகளை எடுப்போம்’ என்ற மகுட வாசகத்துடன் சமூக மாற்றத்திற்காகத் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருக்கும் சங்கு கலைக்கழகமும், மலையக மக்களின் காணி உரிமைக்காகத் ஓயாது குரல் கொடுத்து வரும் சிட்ப்ஸ் நிறுவனமும், இத்தோடு நின்றுவிடாமல் இந்த விழிப்புணர்வை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல மக்கள் நோக்கிப் பயணிக்கத் தயாராகி வருகின்றன.
இத்தகைய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து அரங்கேற்றுவதற்கும், மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கும் தார்மீக மற்றும் நிதி அனுசரணையினை வழங்கிய ‘UNOPS ’ மற்றும் ‘விருத்தி’ நிறுவனங்களுக்கு சங்கு கலைக் கழகம் தங்களது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்து கொண்டனர்.













