அரசின் முறையற்ற விசா கொள்கையால் இலங்கை சர்வதேச மோசடி கும்பல்களின் புகலிடமாக மாறியுள்ளது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார் .
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில்,
“தாராளவாத விசா கொள்கை காரணமாக, கடந்த 5 மாதங்களில் மட்டும் இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபட்ட 652 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 50 சதவீத அதிகரிப்பாகும். கைது செய்யப்பட்ட பலரது விசா மற்றும் கடவுச்சீட்டுகள் காலாவதியாகியுள்ளன.
வெளிநாட்டுச் செலாவணியை ஈட்டும் குறுகிய நோக்கில், நாட்டின் பாதுகாப்பை அரசு அடகு வைத்துள்ளது.” – என்றார்.
விசா கட்டணமின்றி இஸ்ரேலியர்களை அனுமதிக்கும் கொள்கையைச் சுட்டிக்காட்டிய அவர், அறுகம்பை உள்ளிட்ட சுற்றுலாப் பகுதிகளில் அவர்கள் சட்டவிரோத மையங்களை அமைத்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர் என்றும், அரசு இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.
அரசின் நிர்வாகத் திறமையின்மையை விமர்சித்த அவர், “முன்பு ஜனாதிபதி அரசை ‘மலர்த்தொட்டிகள்’ என்றார். ஆனால் இன்று அந்த மலர்த்தொட்டிகள் யாவும் ‘தொட்டாசிணுங்கி’ செடிகளாக மாறிவிட்டன.” – என்றார்.
“உலகில் எங்கும் இல்லாத விலையான 326 டொலருக்கு ஒரு பேரல் டீசலை அரசு கொள்வனவு செய்துள்ளது. இதன் மூலம் எரிபொருள் விலையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளது.” என்றும் அவர் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியின் கீழ் நடந்துள்ள நிலக்கரி ஊழலை மூடிமறைக்கவே ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளார்.
இந்த நிலக்கரி ஊழல் தொடர்பான அனைத்து ஆவணங்களுடன், ஐக்கிய மக்கள் சக்தி அடுத்த வாரம் இலஞ்ச, ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவுக்குச் செல்லவுள்ளது என்றும் முஜிபுர் ரஹ்மான் இதன்போது உறுதிப்படத் தெரிவித்தார்.










