சட்டத்தையும் நீதியையும் கேலிக்குள்ளாக்கும் திசைகாட்டி அரசின் செயற்பாடுகளை முறியடிக்க, அனைத்து எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்து மக்கள் சார்பில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
“மோசடியான திசைகாட்டி அரசின் கொடுங்கோல் ஆட்சிக்கு எதிராக – மாபெரும் மக்களின் குரல்” எனும் தொனிப்பொருளில் பத்தரமுல்லையில் இன்று நடைபெற்ற கூட்டு எதிர்க்கட்சிகளின் விசேட ஊடக சந்திப்பில் சாகர காரியவசம், அரசின் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
கபில சந்திரசேனவின் மரணம் குறித்துப் பேசிய அவர், “கபில சந்திரசேனவின் மரணம் தற்கொலையா? அல்லது அவர் திட்டமிட்ட முறையில் தற்கொலைக்குத் தூண்டப்பட்டாரா? என்ற பாரிய சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து முறையான விசாரணை நடத்தி உண்மை வெளிப்படுத்தப்பட வேண்டும்” என்று வலியுறுத்தினார்.
இலஞ்ச, ஊழல் தடுப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திசாநாயக்க மீது அவர் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளைச் சுமத்தினார்.
முன்னைய ஜனாதிபதி மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர்களைக் கட்டாயப்படுத்தி வாக்குமூலத்தில் சேர்க்குமாறு ரங்க திஸாநாயக்க தன்னை அச்சுறுத்தினார் என்று கபில சந்திரசேன ஏற்கனவே நீதிமன்றத்தில் சத்தியக்கடதாசி சமர்ப்பித்திருந்தார்.
கபில சந்திரசேனவின் பிணை விவகாரத்தில் ரங்க திஸாநாயக்க தலையிட்டு வினோதமான கோரிக்கைகளை முன்வைத்தார் என்றும் சாகர காரியவசம் குறிப்பிட்டார்.
தற்போதைய ஆட்சியில் சட்டம் ஒருதலைப்பட்சமாக அமுல்படுத்தப்படுகின்றது என்றும் அவர் சாடினார்.
“மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர்களுக்கு எதிராக நிலக்கரி முறைகேடு உள்ளிட்ட பல புகார்கள் அளிக்கப்பட்டாலும், பொலிஸாரும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவும் மௌனம் காக்கின்றன. ஆனால் மற்றவர்கள் மீது அச்சுறுத்தல் விடுக்கப்படுகின்றது.” – என்று அவர் மேலும் தெரிவித்தார்.










