குமுதினி படகில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (15-05-2026) நெடுந்தீவில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
கடந்த 1985ஆம் ஆண்டு மே மாதம் 15ஆம் திகதி காலை பல்வேறு தேவைகளுக்காகவும் நெடுந்தீவு மாவிலித் துறையில் இருந்து குறிகாட்டுவான் நோக்கி குழுதினி படகில் பயணித்த பச்சிளம் குழந்தை உட்பட 36 பேர் படுகொலை செய்யப்பட்டனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41ஆவது நினைவு நாள் இன்றாகும்.
இவ்வாறு படுகொலை செய்யப்பட்டவர்களின் 41வது ஆண்டு நினைவு நிகழ்வு நெடுந்தீவு மாவிலித் துறையில் அமைந்துள்ள நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நினைவுகூரப்பட்டுள்ளது.
இன்று காலை 9.15 மணிக்கு நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்வில் வேலன் சுவாமி, நெடுந்தீவு பங்குத்தந்தை, கரைச்சி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் சண்முகராஜா ஜீவராஜா உள்ளிட்ட அரசியல் பிரதிநிதிகள், மதத் தலைவர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்து கொண்டனர்.
இதே வேளை இன்று காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திர பிள்ளையார் ஆலயம் மற்றும் நெடுந்தீவு மாவிலித்துறை சவேரியார் ஆலயம், நெடுந்தீவு தென்னிந்திய திருச்சபை ஆலயம், மற்றும் நெடுந்தீவு தேவசபை ஆலயம் என்பவற்றில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளின் ஆத்மா சாந்திக்கான வழிபாடுகளும் நடைபெற்றன.
நினைவு வணக்க நிகழ்வை தொடர்ந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வார நிகழ்வுகளின் தொடரில் முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கலும் இதன்போது தீவக நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















