அவிசாவளை மற்றும் மாத்தளை ஆகிய இரண்டு பொலிஸ் பிரிவுகளும் நேற்று வியாழக்கிழமை (14) கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு இருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி, மாத்தளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுதெனிய பகுதியில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக மாத்தளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் கட்டுதெனிய பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
கடந்த 13ஆம் திகதி இரவு, குறித்த நபர் மேலும் சிலருடன் கட்டுதெனிய பகுதியில் உள்ள வீடொன்றில், அவ்வீட்டின் காவலாளியுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இதன்போது காவலாளிக்கும் குறித்த நபருக்கும் இடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் முற்றியதையடுத்து, காவலாளி கூர்மையான ஆயுதத்தால் தாக்கியதில் அந்த நபர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்துடன் தொடர்புடைய கட்டுதெனிய பகுதியைச் சேர்ந்த 77 வயதுடைய சந்தேக நபரான காவலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை, அவிசாவளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அவிசாவளை பஸ் நிலையத்துக்கு அருகில் நபர் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு, அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்தவருக்கும் மற்றொரு நபருக்கும் இடையே ஏற்பட்ட தகராறு முற்றியதையடுத்து, சந்தேக நபர் கூர்மையான ஆயுதத்தால் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய கொஸ்கம பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலைச் சம்பவங்கள் தொடர்பான மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.










