சீரற்ற வானிலை காரணமாக பழுதடைந்த, காங்கேசன்துறை – நாகபட்டினம் இடையே பயணிகள் போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சிவகங்கை கப்பல் தொடர்பாக அந்த கப்பல் நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் கே.எம்.ஜெயசீலன் ஒரு ஊடக அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
மோசமான வானிலை காரணமாக, நேற்றுமுன்தினம் சிவகங்கை கப்பலின் இயந்திரம் பழுதடைந்தது. இக்கப்பல் நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் பாதுகாப்பாக நங்கூரமிட்டு நிறுத்தப்பட்டு இருந்தது.
இச்சூழ்நிலை குறித்து சம்பந்தப்பட்ட அனைத்துத் துறையினருக்கும் நாங்கள் உடனடியாகத் தகவல் தெரிவித்து, அவர்களின் உதவியைக் கோரினோம்.
மேலும், இச்சூழ்நிலையில் பயணிகளைப் பாதுகாப்பாகவும் உடனடியாகவும் மீட்பதை உறுதி செய்யும் வகையில், எங்கள் நிறுவனமும் துறைமுக அதிகாரிகளும் இணைந்து இரண்டு பெரிய இயந்திரப் படகுகளை மீட்புப் பணிக்கு அனுப்பி அவர்களை பத்திரமாக நாகப்பட்டினம் துறைமுகத்திற்கு அழைத்து வந்து விட்டோம்.
பயணிகள், கப்பல் பணியாளர்கள் கப்பலில் நாகப்பட்டினம் துறைமுகத்தை பத்திரமாக வந்தடைந்தனர். அச்சப்படும் வகையில் எதுவும் இடம்பெறவில்லை என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.










