குருநாகல் மாநகர சபையின் பிரதி மேயர், 30 இலட்சம் ரூபா பணத்தை இலஞ்சமாகப் பெற்றுக்கொள்ள முயன்றபோது, பத்தரமுல்லைப் பகுதியில் வைத்து இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் பேருந்து நிலையத்தைத் துப்புரவு செய்தல் மற்றும் அங்குள்ள பொது மலசலக்கூடங்களைப் பராமரிப்பதற்கான டெண்டரை வழங்குவதற்காகவே இவர் இந்த இலஞ்சத்தைக் கோரியுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இந்த டெண்டரை ஒருவருக்குப் பெற்றுக்கொடுப்பதற்காக முதற்கட்டமாக 30 இலட்சம் ரூபா ரொக்கமாகவும், பின்னர் மாதாந்தம் தலா 5 இலட்சம் ரூபா வீதமும் பிரதி மேயரால் கோரப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டப் பணத்தைப் பெற்றுக்கொள்ள முற்பட்ட போதே, மறைந்திருந்த இலஞ்ச, ஊழல் தடுப்புப் பிரிவு அதிகாரிகள் அவரைச் சுற்றிவளைத்துக் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபர் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக குருநாகல் மாநகர சபைக்குத் தெரிவானவர். எனினும், சபையில் ஆட்சியமைப்பதற்காகத் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியதையடுத்து, அவர் பிரதி மேயராகப் பதவியேற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கைது செய்யப்பட்டுள்ள பிரதி மேயர் மேலதிக விசாரணைகளின் பின்னர் இன்று புதுக்கடை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
“தூய்மையான அரசியல்” என்ற கோஷத்துடன் ஆட்சியமைத்துள்ள தேசிய மக்கள் சக்தி நிர்வாகத்தின் கீழ் உள்ள பிரதி மேயர் ஒருவர், தூப்புரவுப் பணி டெண்டருக்காகவே இலஞ்சம் வாங்கி கைதாகியுள்ளமை அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.










