கடந்த மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தொழிலாளர் தின (மே தினம்) நிகழ்வில் கலந்துகொள்ளாத மீனவர்களுக்குத் தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளமை பருத்தித்துறை மீனவர் சமூகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம், பருத்தித்துறை நகர் கடல் தொழிலாளர் கூட்டுறவுச் சங்க உறுப்பினர்களை, தேசிய மக்கள் சக்தியின் ஏற்பாட்டில் இடம்பெற்ற மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு பருத்தித்துறை கொட்டடி மீனவர் சங்கம் அறிவுறுத்தியிருந்தது.
சங்கத்தின் அறிவுறுத்தலை மீறி, குறித்த மே தினக் கூட்டத்தில் சுமார் 60 மீனவ சங்க உறுப்பினர்கள் கலந்துகொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூட்டத்திற்குச் செல்லாத உறுப்பினர்களுக்கு தலா 3,000ரூபா தண்டப்பணம் (அபராதம்) செலுத்துமாறு மீனவர் சங்கம் தற்போது உத்தரவிட்டுள்ளது.
இந்த விவகாரம் பருத்தித்துறை மீனவர் மத்தியில் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து மீனவ சமூகத்தினர் மற்றும் சமூக நலன் விரும்பிகள் முன்வைக்கும் பிரதான குற்றச்சாட்டுகள் வருமாறு
கடல் தொழிலாளர் சங்கங்களை ஓர் அரசியல் கட்சியின் தேவைக்காகப் பயன்படுத்துவது மற்றும் உறுப்பினர்களைக் கட்டாயப்படுத்தி அரசியல் கூட்டங்களுக்கு அழைத்துச் செல்வது ஜனநாயகத்திற்கு முரணானது.
மக்களின் விசனம்: தற்போதைய பொருளாதாரச் சூழலில், அன்றாட வாழ்வாதாரத்திற்காகப் போராடும் மீனவர்கள் மீது இவ்வளவு பெரிய தொகையை அபராதமாக விதிப்பது அநீதியானது என ஆளும் தரப்பினர் மற்றும் சங்கத்தினர் மீது பலரும் விசனம் தெரிவித்துள்ளனர்.
அரசியல் மயமாக்கல்: சுயாதீனமாக இயங்க வேண்டிய கடல் தொழிலாளர் சங்கங்களை தேசிய மக்கள் மயப்படுத்தும் முயற்சியாகவே இவ்வாறான செயற்பாடுகள் அமைந்திருப்பதாகச் சமூக நலன் விரும்பிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்தச் சம்பவம் பருத்தித்துறை மீனவக் கிராமங்களில் தற்போது பேசுபொருளாக மாறியுள்ளதுடன், கட்டாய அரசியல் பங்கேற்பு குறித்த விவாதங்களையும் தோற்றுவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பாக பருத்தித்துறை கொட்டடி மீனவர்கள் சங்க செயலாளரிடம் வினவிய போது அவர் குறிப்பிடுகையில்
தமது சங்கத்தின் கடந்த ஆண்டு பொதுக்கூட்டத்தில் எடுத்த தீர்மானத்தின் படி தமது சங்கத்திற்கு கூட்டங்களுக்கு வறுமாறு அழைப்பு விடுவிக்கப்பட்டால் அக் கூட்டத்தில் கலந்து கொள்ளாத பட்சத்தில் அவர்களுக்கு 3000 தண்டப்பணம் அறவிடப்படும் அதன் அடிப்படையில் தான் இவ் தண்டம் அளவிடப்பட்டது என தெரிவித்துள்ளார்










