தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிப் பெரும்பான்மை பலத்துடன் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள த.வெ.க தலைவர் விஜயை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்காதமைக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இன்று இரண்டாவது முறையாகவும் ஆளுநரைச் சந்தித்த விஜய், ஆட்சி அமைப்பதற்கான உரிமை கோரலை மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இந்தநிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கையில்,
“மக்கள் த.வெ.கவைத் தனிப்பெரும் கட்சியாகத் தெரிவு செய்துள்ளனர். எனவே, குழப்பங்களுக்கு இடமளிக்காமல் விஜயைப் பதவியேற்க ஆளுநர் அனுமதிக்க வேண்டும். இதுவே முறையானது” – என்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு. வீர.பாண்டியன் விடுத்துள்ள அறிக்கையில்,
“பதவியேற்புக்கு முன்னரே பெரும்பான்மையை நிரூபிக்குமாறு ஆளுநர் வற்புறுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசமைப்புச் சட்டத்தை மதித்து ஆளுநர் செயற்பட வேண்டும். விஜய் தனது பெரும்பான்மையைச் சட்டசபையிலேயே நிரூபிப்பதற்கு ஆளுநர் போதிய அவகாசம் வழங்க வேண்டும்.” – என்று வலியுறுத்தியுள்ளார்.
மேலும், ஆளுநரின் நடவடிக்கையை விமர்சித்துள்ள நடிகர் பிரகாஷ் ராஜ் தனது ‘எக்ஸ்’ தளத்தில்,
“ஆளுநரின் இந்தச் செயற்பாடு அரசமைப்புக்கு முரணானது. எமக்குள்ளே அரசியல் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், ஆனால் விஜய்க்கு மக்கள் ஆணை கிடைத்துள்ளது. சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க அவருக்கு உரிய வாய்ப்பு வழங்கப்பட வேண்டும்.” – என்று பதிவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஆட்சி அமைப்பதில் ஏற்பட்டுள்ள இந்த இழுபறி நிலை காரணமாக அரசியல் களம் சூடுபிடித்துள்ளதோடு, ஆளுநரின் அடுத்தகட்ட நகர்வு குறித்து அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.










