தமிழக வெற்றிக் கழகம் (TVK) ஆட்சி அமைப்பதற்கு ஆதரவளிக்க தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி ஆணைக்குழுவின் (TNCC) அரசியல் விவகாரக் குழு ஒருமனதாக முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும் இந்த தீர்மானம் குறித்து, தவெக தலைவர் விஜயிடம் இருந்தோ அல்லது காங்கிரஸ் தரப்பில் இருந்தோ இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக, மாநிலத்தில் ஆட்சி அமைக்க காங்கிரஸின் ஆதரவை விஜய் கோரியிருந்ததாக அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி. வேணுகோபால் உறுதிப்படுத்தியிருந்தார். அண்மையில், நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றி தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது.
இருப்பினும், ஆட்சி அமைப்பதற்குத் தேவையான பெரும்பான்மை எண்ணிக்கையை விட 10 இடங்கள் குறைவாக இருப்பதால், காங்கிரஸின் ஆதரவு தற்போது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது.
இது குறித்து ஊடகங்களிடம் பேசிய கே.சி. வேணுகோபால், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தமிழகத்தில் ஆட்சி அமைக்க இந்திய தேசிய காங்கிரஸின் ஆதரவைக் கோரியுள்ளதாகத் தெரிவித்திருந்தார்.
மேலும், தனது அரசியல் பயணத்தில் பெருந்தலைவர் காமராஜரின் கொள்கைகளால் தான் ஈர்க்கப்பட்டிருப்பதாகவும் விஜய் குறிப்பிட்டதாக அவர் கூறினார். தமிழக மக்களின் தீர்ப்பு என்பது அரசியலமைப்பைப் பாதுகாப்பதில் உறுதியாக இருக்கும் ஒரு மதச்சார்பற்ற அரசாங்கத்திற்கானதாகும் என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாஜக அல்லது அதன் மறைமுக ஆதரவு பெற்ற சக்திகள் எந்த வகையிலும் தமிழகத்தில் ஆட்சி நடத்துவதை காங்கிரஸ் விரும்புவதில்லை என்றும், அதன் அடிப்படையில் விஜயின் கோரிக்கை குறித்து இறுதி முடிவெடுக்குமாறு தமிழ்நாடு காங்கிரஸ் ஆணைக்குழுவிற்கு கட்சி மேலிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
இவ்வாறிருக்கையில், இன்று காலை, இந்திய ஊடகங்கள் சிலவற்றில் காங்கிரஸ் விஜய்க்கு ஆதரவு வழங்க தீர்மானித்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.










