வியட்நாம் சோசலிசக் குடியரசின் ஜனாதிபதியும், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான டோ லாம் (Tô Lâm) உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று மே 07 ஆம் திகதி இலங்கை வருகிறார்.
இலங்கைக்கும் வியட்நாமுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 55வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் வகையில், 2025 ஆம் ஆண்டு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மேற்கொண்ட வியட்நாமுக்கான உத்தியோகபூர்வ பயணத்தைத் தொடர்ந்து, அவரது அழைப்பின் பேரில் இவ்விஜயம் மேற்கொள்ளப்படுகிறது.
இரண்டு நாட்கள் திட்டமிடப்பட்டுள்ள இந்த விஜயத்தின் போது, இரு தலைவர்களும் பரஸ்பர நலன் சார்ந்த பல்வேறு விடயங்கள் குறித்து இருதரப்புப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவுள்ளார்கள்.
வியட்நாம் ஜனாதிபதி, “இலங்கை – வியட்நாம் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத்துறை மன்றத்தின்” தொடக்க விழா உள்ளிட்ட பல்வேறு உயர்மட்ட நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.
ஜனாதிபதி டோ லாமுடன், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்கத்தின் சிரேஷ்ட அமைச்சர்களும், முக்கிய அரசியல் தலைவர்களும் இவ்விஜயத்தில் இணைந்து கொள்வார்கள் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.










