மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய கூட்டமைப்பின் சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ தலைமையிலான குழுவினர் இன்று காலை இலங்கை வந்தடைந்தனர்.
ரஷ்யாவின் மொஸ்கோ நகரில் இருந்து புறப்பட்ட ஏரோபுளோட் நிறுவனத்திற்குச் சொந்தமான எஸ்.யு. 288 என்ற விமானம் மூலம், காலை 10.20 மணியளவில் அவர்கள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தனர்.
விமான நிலையத்தின் முக்கிய பிரமுகர் முனையத்தில் வைத்து, அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன, சுகாதார அமைச்சின் செயலாளர் டாக்டர் அனில் ஜாசிங்க மற்றும் இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகரியன் உள்ளிட்ட அரச உயரதிகாரிகள் ரஷ்ய தூதுக்குழுவினரை உற்சாகமாக வரவேற்றனர்.
இந்த விஜயத்தின் போது, ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ, இலங்கையின் சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் டாக்டர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து முக்கிய கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.
அத்துடன், தனது பயணத்தின் ஒரு பகுதியாக கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் மருத்துவ பீடம் ஆகியவற்றுக்கும் அவர் விஜயம் செய்து கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.










