அது 1849ஆம் ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி.
பத்து வயதான மகாராஜா துலீப் சிங், கோட்டையின் மையப் பகுதியில் அமைந்துள்ள ஷீஷ் மஹாலுக்கு அழைத்து வரப்பட்டார்.
அவரது தந்தை, மகாராஜா ரஞ்சித் சிங், பத்து ஆண்டுகளுக்கு முன்பே காலமானார். அவரது தாயார், ராணி ஜிந்தன் கவுர், சில காலத்திற்கு முன்பு நகரத்திற்கு வெளியே இருந்த மற்றொரு அரண்மனைக்கு வலுக்கட்டாயமாக மாற்றப்பட்டிருந்தார்.
துலீப் சிங், சிவப்பு நிற அங்கிகள் மற்றும் தொப்பிகளை அணிந்திருந்த ஆங்கிலேய வீரர்களால் சூழப்பட்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, ஒரு பொது விழாவில், தனது அரசவையில் எஞ்சியிருந்த தலைவர்களுக்கு முன்னால், பிரிட்டிஷ் அரசாங்கம் பல ஆண்டுகளாகக் காத்திருந்த ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டார்.
அடுத்த சில நிமிடங்களில், லாகூர் கோட்டையில் ஏற்றப்பட்டிருந்த சீக்கிய கால்சா கொடி இறக்கப்பட்டு, அதற்குப் பதிலாக கிழக்கிந்திய கம்பெனியின் கொடி ஏற்றப்பட்டது.
இதன் மூலம், கிழக்கிந்திய கம்பெனி சீக்கிய சாம்ராஜ்யத்தின் மீதான ஆதிக்கத்தைப் பெற்றது மட்டுமின்றி, உலகின் மிகவும் பிரபலமான கோஹினூர் வைரத்தையும் தன் வசமாக்கியது.
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.










