இளைஞர்களின் அரசியல் வகிபாகங்களை அதிகரிப்பதற்கு கட்சிகளில் உள்ள மூத்தவர்கள் ஊக்கமளிக்க வேண்டுமென இளைஞர்கள் கூட்டாக வேண்டுகோள் விடுத்தனர்.
தேசிய சமாதான பேரவையின் அனுசரணையுடன் சொன்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இளைஞர்களின் அரசியல் வகிபாகம் தொடர்பான கலந்துரையாடலின் பின் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.
அவர்கள் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் இளைஞர்களின் அரசியல் ஈடுபாடு குறைவாக உள்ள நிலையில் அதனை ஊக்கப்படுத்துவதற்கு அரசியல் கட்சிகளின் மூத்தோர்கள் செயல்பட வேண்டும்.
இளைஞர்கள் அரசியலில் ஈடுபட விருப்பமாக இருக்கின்ற நிலையிலும் கூட கட்சிகளில் உள்ள மூத்தவர்களின் சில நெருக்கடியான செயற்பாடுகள் காரணமாக அவர்களுக்கான வாய்ப்புகள் உரிய நேரத்தில் வழங்கப்படுவதில்லை.
குறிப்பாக கூறப்போனால் அரசாங்கத்தினால் இளைஞர்களுக்காக உள்ளூராட்சி மன்றங்களில் வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு காரணமாகவே கட்சிகள் வேறு வழியின்றி இளைஞர்களை உள்ளீர்க்க வேண்டிய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
மாறாக அரசியல் கட்சிகளாக இளைஞர்களை அரசியலில் ஈடுபட வைப்பதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது இளைஞர்களும் ஆர்வத்துடன் அரசியலில் பங்கெடுக்கும் சூழல் ஏற்படும் என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.










