ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன.
மட்டக்களப்பு நகரில் காந்திபூங்காவில் உள்ள ஈஸ்டர் படுகொலை ஞாபகார்த்த தூபியில் இன்று காலை மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம்பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதி முதல்வர் தி.டினேஸ் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள், ஊடகவியலாளர்கள், பொதுமக்கள் என பெருமளவானோர் கலந்துகொண்டனர்.
இதன்போது நினைவுத்தூபியில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டதுடன் படுகொலை செய்யப்பட்டவர்களின் ஆத்மசாந்திக்கான பிரார்த்தனையும் முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மாநகர சபையின் முதல்வர் மற்றும் முன்னாள் பிரதி முதல்வர் சத்தியசீலன் ஆகியோரினால் நினைவுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இதேபோன்று இன்றைய தினம் ஈஸ்டர் தாக்குதலுக்குள்ளான சீயோன் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இராணுவத்தினர் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்ததை காணமுடிந்தது.
















